Breaking News

ஜனா­தி­பதி தேர்­தலை சுதந்திரமாகவும் நீதியாகவும் நடத்தியது எப்படி?

நடந்து முடிந்த ஜனாதிபதித் தேர்தல் இலங்கையின் வரலாற்றில் மிகவும் நீதியாகவும் சுதந்திரமாகவும் நடைபெற்ற ஒரு முக்கிய தேர்தலாக கொள்ளப்படுகிறது. அந்த வகையில் இம் முறை இத் தேர்தலை எந்தவிதமான நெகிழ்வுப் போக்குகளுக்கும் இடமின்றி தேர்தல்கள் திணைக்களம் எவ்வாறு நீதியாக நடத்தி முடித்தது என்பது பற்றிய விபரங்களை 'விடிவெ ள்ளி' மூலமாக வாசகர்களுடன் பகிர்ந்து கொள்கிறார் பிரதி தேர்தல் ஆணையாளர் எம்.எம் மொஹமட்.

சந்திப்பு : ஏ.ஆர்.ஏ.பரீல்

MMMOHAMED தேர்­த­லொன்று நடாத்­தப்­படும் தினத்­தன்றோ அதற்கு முன்­தி­னமோ வாக்­குகள் எண்­ணப்­படும் நேரமோ எவ்­வி­த­மான குழப்பமோ குள­று­ப­டிகளோ நடை­பெற முடி­யாத வகையில் தேர்தல் சட்­டங்­களும் நடை­மு­றை­களும் வலுப்­ப­டுத்­தப்­பட்­டுள்­ளன.

பாரா­ளு­மன்ற நிய­திச்­சட்­டங்­களில் இருக்­கின்ற சட்ட விதி­களை நடை­மு­றைப்­ப­டுத்­து­வது தொடர்­பாக நீதி­மன்ற தீர்ப்­புகள் வழி­காட்­டி­க­ளாக அமைந்­துள்­ளன. உதா­ர­ண­மாக தேர்தல் சட்­டங்­களில் தேர்­த­லொன்றை ரத்துச் செய்ய மூன்று சந்­தர்ப்­பங்­களில் அனு­மதி இருந்­தது. அவை,

1. உரிய நேரத்தில் வாக்­க­ளிப்பு நடை­பெ­றாமை.
2. தொடர்ச்­சி­யாக வாக்­க­ளிப்பை நடத்தி உரிய நேரத்­துக்கு முடிக்க முடி­யாமற் போகின்­றமை
3. வாக்குப் பெட்­டியை வாக்கு எண்ணும் நிலை­யத்­துக்கு எடுத்துச் செல்ல முடி­யாமற் போகின்­றமை.

தேர்­தலை இரத்துச் செய்­தாலும் இரத்துச் செய்­யப்­பட்ட வாக்­க­ளிப்பு நிலை­யத்தில் பதிவு செய்­யப்­பட்­டுள்ள வாக்­குகள் தேர்தல் முடிவில் எவ்­வித பாதிப்­பையும் ஏற்­ப­டுத்­தாத சந்­தர்ப்­பங்­களில் மாத்­தி­ரமே மீள் வாக்­க­ளிப்பை நடாத்த முடியும் என்­பது தேர்தல் சட்­டங்­களில் காணப்­படும் விதி­யாகும்.

இச் ­சட்­டங்­க­ளுக்கு அமை­வாக ஏதேனும் ஒரு வாக்­க­ளிப்பு நிலை­யத்தில் 7 மணிக்கு வாக்­க­ளிப்பு ஆரம்­பித்து 4 மணிக்கு முடி­வு­பெற்று வாக்­குப்­பெட்டி வாக்கு எண்ணும் நிலை­யத்­துக்கு கொண்டு செல்­லப்­பட்டால் இடையில் வன்­மு­றைகள் நடை­பெற்­றி­ருந்­தாலும் வாக்­குகள் எண்­ணப்­படும்.

ஆனால் 1998ஆம் ஆண்டு வட மாகாண சபைத் தேர்தல் மற்றும் 2000ஆண்டு பாரா­ளு­மன்ற தேர்­தல்­க­ளின்­போது நடை­பெற்ற வன்­மு­றை­க­ளினால் வாக்­க­ளிப்பு இரத்துச் செய்­யப்­ப­டா­மைக்கு எதி­ராக உயர் நீதி­மன்­றத்தில் தொடுக்­கப்­பட்ட 2 வழக்­கு­களில் தீர்ப்­ப­ளித்த உயர்­நீ­தி­மன்ற நீதி­ய­ரசர் மார்க் பர்­ணாந்­துவின் தீர்ப்பு தேர்தல் வர­லாற்றில் ஓர் மைல் கல்­லாகும்.

அவரின் தீர்ப்­பின்­படி வாக்­க­ளிப்பு உரிய நேரத்­துக்கு ஆரம்­பித்­தாலும் முடி­வ­டையும் நேரம் வரை தொடர்ச்­சி­யாக வாக்­க­ளிப்பு தடை­யின்றி நடை­பெற வேண்­டு­மென்ற நிபந்­தனை மிக முக்­கி­ய­மா­ன­தென்றும் விகி­தா­சார பிர­தி­நி­தித்­துவ தேர்­த­லொன்றில் தேர்தல் முடிவு என்­பது வெறு­மனே கட்­சிகள் பெற்றுக் கொள்­கின்ற வாக்­குகள் மட்­டு­மன்றி வேட்­பா­ளர்­களின் விருப்பு வாக்­கு­க­ளையும் குறிக்கும் என்றும் அவர் தெரி­வித்தார். இதனால் வாக்­க­ளிப்பின் போது நடை­பெறும் ஒரு சிறு சம்­பவம் கூட சட்­டத்தின் படி வாக்­க­ளிப்பின் தொடர்ச்சித் தன்­மை­யினைப் பாதிக்­கின்­ற­தெ­னவும் ஒரு சில வாக்­குகள் பலாத்­கா­ர­மாக அளிக்­கப்­பட்­டாலும் விருப்பு வாக்­கு­களைப் பாவித்து தேர்தல் முடி­வுகள் பாதிப்­புக்­குள்­ளா­கலாம் எனவும் கூறினார்.

இதனால் முன்னாள் தேர்தல் ஆணை­யாளர் தயா­னந்த திசா­நா­யக்­க­விடம் வாக்­க­ளிப்பின் தொடர்ச்­சித்­தன்­மையை பாதிக்­கக்­கூ­டிய நிகழ்­வுகள் எவை என நீதி­மன்­றுக்கு அறி­விக்­கு­மாறு கேட்ட நீதி­பதி அவரால் சமர்ப்­பிக்­கப்­பட்ட பின்­வரும் நிகழ்­வு­களின் போதும் வாக்­க­ளிப்பை இரத்துச் செய்ய முடி­யு­மெனத் தீர்ப்­ப­ளித்தார்.

1. வாக்­கா­ளர்கள் விரட்­டி­ய­டிக்­கப்­படும் சந்­தர்ப்­பங்கள்
2. பலாத்­கார வாக்­க­ளிப்பு நடை­பெறும்போது
3. தேர்தல் பணி­யா­ளர்கள் வாக்­குச்­சா­வ­டியை அணுக முடி­யா­த­வாறு தடை­யேற்­ப­டுத்­தும்­போது 4. வாக்­க­ளிப்பு நிலை­யத்தில் சிரேஷ்ட அலு­வ­லரால் கட்­டுப்­ப­டுத்த முடி­யாத ஏதேனும் நிகழ்வு கார­ண­மாக வாக்­க­ளிப்­புக்கு தடங்கல் ஏற்­படும் போது
5. குறிப்­பிட்ட வாக்­க­ளிப்பு நிலை­ய­மொன்றில் நீதி­யா­னதும் நேர்­மை­யா­ன­து­மான தேர்­த­லொன்று நடை­பெ­ற­வில்லை என தேர்தல் ஆணை­யாளர் கருதும் போது வாக்­க­ளிப்பை ரத்துச் செய்ய முடியும்.

குறிப்­பாக இம்­முறை நடை­பெற்ற ஜனா­தி­பதித் தேர்­தலின் போது தேர்தல் திணைக்­க­ளத்­துக்கு தேர்தல் தினம் சவா­லாக இருக்­க­வில்லை. தேர்தல் வேட்­பு­மனு தாக்கல் செய்­யப்­பட்ட தினம் முதல் தேர்தல் நடை­பெற்று முடி­வுகள் அறி­விக்­கப்­படும் வரை தேர்தல் கால­மாகும். இந்­நி­லையில் தேர்­த­லுக்கு முன்பு என்ன நடக்கும் என்­பதை நாம் அறிந்து வைத்­தி­ருந்தோம்.

தேர்தல் சட்­டத்தில் தேர்தல் தினத்­துக்கு முன்­னைய கால தேர்தல் சட்ட மீறல்­க­ளுக்­கான சட்ட பொறி­மு­றைகள் குறை­வா­கவே உள்­ளன. அர­சி­ய­ல­மைப்பின் 17ஆவது திருத்­தச்­சட்­டத்தின் படி அரச வளங்கள் எவ­ரேனும் வேட்­பா­ளரை ஊக்­கு­விப்­ப­தற்கோ அல்­லது மற்­ற­வ­ருக்கு பாதிப்பு ஏற்­ப­டுத்தும் வகை­யிலோ பாவிக்­கப்­ப­டக்­கூ­டாது. இவற்றை ஒரு­வ­ருக்கு ஆத­ர­வாகப் பாவிப்­பதை தவிர்க்க முறை­யான திட்­டங்­களை வகுத்துக் கொள்ள வேண்­டி­யி­ருந்­தது.தேர்தல் ஆணை­யாளர் இதற்குப் பல உத்­தி­களைக் கையாண்டார். 

தேர்தல் சட்­டத்தை வலு­வாக்கம் செய்­கின்ற பொலிஸ் திணைக்­களம் ஊழி­யர்­க­ளுக்கு மேல­தி­க­மாக தேர்தல் திணைக்­கள ஊழி­யர்­க­ளையும் பயன்­ப­டுத்திக் கொண்டார்.

போட்­டி­யி­டு­கின்ற கட்­சி­களின் பிர­தி­நி­தி­களை உள்­ள­டக்­கிய தேர்தல் முறைப்­பாட்டு நிலை­யியற் குழு­வொன்­றினை நிறுவி அக்­கு­ழுவின் நிரந்­தர அங்­கத்­தி­னர்­க­ளாக அக்­கட்­சி­களின் பிர­தி­நி­தி­களை நிய­மித்­த­துடன் அடிக்­கடி அவர்­க­ளுடன் கலந்­து­ரை­யா­டல்­களை மேற்­கொண்டு பிரச்­சி­னை­க­ளுக்கு தீர்­வு­களைக் கண்­ட­றிந்தார்.

தேர்தல் செய­ல­கத்­திலும் மாவட்ட தெரிவு அத்­தாட்சி அலு­வலர் அலு­வ­ல­கங்­க­ளிலும் தேர்தல் முறைப்­பாட்டு கையேற்பு நிலை­யங்­களை நிறுவி முறைப்­பா­டு­களை உட­ன­டி­யாக பொலி­ஸாரின் கவ­னத்­துக்கு கொண்டு வந்து உட­னடி நட­வ­டிக்­கை­களில் ஈடு­பட வாய்ப்­புக்­களை ஏற்­ப­டுத்­தினார்.

இவ் அனைத்து இடங்­க­ளிலும் உள்ளூர் தேர்தல் கண்­கா­ணிப்பு நிறு­வ­னங்­களின் பிர­தி­நி­திகள் நிய­மனம் செய்­யப்­பட்­டனர். அவர்கள் தேர்­தலைக் கண்­கா­ணிப்­ப­தற்கும் தேர்தல் சட்ட மீறல்­களை உரிய தரப்­பி­ன­ருக்கு முன்­வைக்­கவும் ஏற்­பா­டுகள் செய்­யப்­பட்­டன.
17ஆவது அர­சி­ய­ல­மைப்பு திருத்த சட்­டத்தில் உள்­ள­வாறு ஊட­கங்­க­ளுக்­கான வழி­காட்டல் நெறி­களை வெளி­யிட்டு ஊடக நிறு­வ­னங்கள் அவற்றைப் பின்­பற்ற வேண்­டிய முறை­களும் தேர்தல் திணைக்­க­ளத்­தினால் விளக்­கப்­பட்­டன.

இவ்­வ­ழி­காட்டி நெறி­களை சில ஊட­கங்கள் பின்­பற்றத் தவ­றிய போது நீதி­மன்ற தீர்ப்­பு­களில் ஊடக நெறி பின்­பற்­றப்­பட வேண்­டிய அவ­சியம் வலி­யு­றுத்­தப்­பட்­டுள்­ளமை தொடர்­பாக அவற்­றுக்கு அறி­வூட்டி மட்­டுப்­ப­டுத்த நட­வ­டிக்­கைகள் எடுக்­கப்­பட்­டன. அத்­தோடு அரச ஊட­கங்கள் மற்றும் அரச சார்­பான ஊட­கங்கள் என்­ப­ன­வற்றின் தலை­வர்­க­ளோடு கலந்­து­ரை­யா­டல்­களை நடாத்தி ஊடக வழி­காட்டி நெறி­களை பின்­பற்ற வேண்­டிய அவ­சியம் வலி­யு­றுத்­தப்­பட்­டது. 

இவற்­றுக்கும் மேல­தி­க­மாக அடிக்­கடி ஊட­கங்­க­ளு­ட­னான கலந்­து­ரை­யாட்­களை நடாத்­தியும் 35க்கும் மேற்­பட்ட ஊடக அறி­வித்­தல்­களை வெளி­யிட்டும் தேர்தல் சட்­டத்தின் வலு­வாக்கம் தொடர்­பாக மக்கள் விழிப்­பூட்­டப்­பட்­டி­ருக்­கி­றார்கள். 

வாக்­குப்­பெட்­டிகள் மாற்­றப்­ப­டு­கின்­றன. வாக்கு எண்ணும் போது குள­று­ப­டிகள் நடை­பெ­று­கின்­றன என சில­ரிடம் காணப்­பட்ட மூட நம்­பிக்­கை­களை இல்­லாமற் செய்யும் வகையில் அர­சியல் கட்­சி­களின் பிர­தி­நி­திகள் தெளி­வுப்­ப­டுத்­தப்­பட்­டனர். 

வாக்­குப்­பெட்­டிகள் எவ்­வித பாதிப்­புக்கும் உட்­ப­டாது வாக்­க­ளிப்பு நிலை­யத்­துக்கு வந்து சேர்வதை உறுதிப்படுத்திக் கொள்ளும் வகையிலான நடைமுறைகள் கையாளப்பட்டன. 

மேலும் வாக்குகள் எண்ணும் போது ஆணையாளரின் பிரதிநிதிகள் என்ற வகையில் அரசியல் கட்சி பிரதிநிதிகளுக்கு மேலதிகமாக தேர்தல் கண்காணிப்பு குழுக்களின் கண்காணிப்பாளர்கள் பங்குபற்ற அவகாசம் வழங்கப்பட்டது.

கட்சி பிரதிநிதிகளின் வேண்டுகோளுக்கு அமைய பொது நலவாய நாடுகளின் அமைப்பு, தெற்காசிய தேர்தல் முகாமையாளர்களின் ஒன்றியம், ஆசிய பிராந்திய தேர்தல் அதிகாரிகளின் சங்கம் என்பனவற்றைச் சேர்ந்த 55 க்கும் மேற்பட்ட சர்வதேச கண்காணிப்பாளர்கள் தருவிக்கப்பட்டு கண்காணிப்பு பணிகளில் ஈடுபட அவகாசம் அளிக்கப்பட்டது.

மேலதிகமாக உள்ளூர் தேர்தல் கண்காணிப்பு நிறுவனங்கள் வெளிநாடுகளின் கண்காணிப்பாளர்களை வரவழைத்து கண்காணிப்பு நடவடிக்கைகளில் ஈடுபடுத்தவும் அவகாசம் வழங்கப்பட்டது.

நன்றி : விடிவெள்ளி

No comments