நண்பன் செய்த துரோகம்!
''சியாமின் மனைவி எனக்கு அழைப்பினை ஏற்படுத்தினார் சியாமின் தொலைபேசி செயலிழந்துள்ளதாகவும் அவரிடம் கதைப்பதற்கு தொலைபேசியை கொடுக்குமாறும் கூறினார். அப்போது சியாம் என்னுடன் இருக்கவில்லை. அச்சமயம் சியாம் காணாமல் போயிருப்பதை என்னாலும் ஊகிக்க முடிந்தது.''
பம்பலப்பிட்டி பிரதேசத்தின் பிரபல முஸ்லிம் வர்த்தகரான மொஹமட் சியாம் கடத்தப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் பிரதான சூத்திரதாரியாக கருதப்பட்டு சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ள அவரது எட்டு வருட நண்பர் ஆரம்பத்தில் பம்பலப்பிட்டி பொலிஸாருக்கு அளித்த வாக்குமூலமே இது.
முப்பத்தைந்து வயதான பாதணி வர்த்தகரான சியாம் துப்பாக்கிச்சூட்டு காயங்களுடன் கடந்த வாரம் சடலமாக மீட்கப்பட்டதைத் தொடர்ந்து அவரது கொலை தொடர்பான விசாரணைகள் துரிதப்படுத்தப்பட்டுள்ளதுடன் பல்வேறு நம்ப முடியாத தகவல்களும் வெளிச்சத்துக்கு வந்துள்ளன.
மூன்று பிள்ளைகளின் தந்தையான சியாமை அவருடன் எட்டு வருடங்கள் ஒன்றாக பழகிய மிக நெருங்கிய நண்பரே அழைத்துச் சென்று கொலை செய்துள்ளமை தெரிய வந்ததைத் தொடர்ந்து சியாமின் குடும்பத்தினர் உட்பட அனைவரும் அதிர்ச்சியில் உறைந்து போயுள்ளனர்.
நடந்தது என்ன?
மே மாதம் 22 ஆம் திகதி இரவு முதல் பிரபல வர்த்தகரான மொஹமட் சியாம் காணாமல் போயுள்ளார். இந்நிலையில் குறித்த தினத்தன்றே பம்பலப்பிட்டி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளதுடன் குடும்பத்தினரின் தேடுதல் முயற்சிகளும் தொடர்ந்துள்ளன.
எனினும் கடந்த 30 ஆம் திகதி வரை சியாம் உயிரிழந்திருப்பது அவரது குடும்பத்தினருக்கு தெரியவரவில்லை.
இந்நிலையில் கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவின் அழைப்பையேற்று அங்கு சென்ற சியாமின் குடும்ப உறுப்பினர் ஒருவர் குற்றத்தடுப்பு பிரிவினர் காட்டிய புகைப் படத்தால் அதிர்ச்சியில் உறைந்து போயுள்ளார்.
அந்த நிமிடம் வரை சியாம் எங்கோ உயிருடன் இருக்கிறார் என்ற நம்பிக்கையில் இருந்த சியாமின் குடும்பத்தினரின் தேடல்களுக்கு அப்புகைப்படம்தான் முற்றுப்புள்ளி வைத்தது.
இந்நிலையில் தலையிலும் மார்பிலும் துப்பாக்கிச்சூட்டுக் காயங்களுடன் காணப்பட்ட சியாமின் ஜனாஸாவையே கம்பஹா வைத்தியசாலையிலிருந்து 30 ஆம் திகதி குடும்பத்தினரால் பெற்றுக்கொள்ள முடிந்தது.
22ஆம் திகதி கடத்தப்பட்ட மொஹமட் சியாம் மறுநாள் (23ஆம் திகதி)க்குள் கொலை செய்யப்பட்டுள்ளார். 23 ஆம் திகதி தொம்பே பிரதேசத்தில் துப்பாக்கிச்சூட்டுக் காயங்களுடன் சடலம் ஒன்றை மீட்ட பொலிஸார் அதனை அடையாளம் காண கம்பஹா வைத்தியசாலையின் பிரேத அறையில் வைத்திருந்தனர்.
இந்நிலையிலேயே சியாமை தேடி அவரது குடும்பத்தினர் நாடளாவிய ரீதியில் வலை வீசியிருந்தனர். எனினும் சியாமின் ஜனாஸாவையே அவர்களால் கண்டுகொள்ள முடிந்தது.
கொலைக்கு யார் காரணம்?
சியாம் என்ற வர்த்தகரின் கொலையின் பின்னணியில் பிரதான சூத்திரதாரியாக கருதப்படும் அவரது உற்ற நண்பன் கூடவே இருந்து குழிபறித்துள்ளமை பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
எனினும் சியாம் காணாமல் போனது முதல் சியாமை தேடி அலைவது போலும் அது தொடர்பில் அதீத அக்கறை கொண்டவர் போலும் பிரதான சூத்திரதாரியாக கருதப்படும் சந்தேக நபர் அரங்கேற்றிய நாடகங்கள் பிரமிக்க வைக்கின்றன.
ஏனெனில் சியாம் காணாமல் போனமை தொடர்பில் பம்பலப்பிட்டி பொலிஸ் நிலையத்தில் சியாம் தரப்பில் செய்யப்பட்ட முதல் முறைப்பாடே சந்தேக நபரால் செய்யப்பட்டதாகும் .
இதனை விட குறித்த நாட்களில் சரியாக உண்ணாமலும் பருகாமலும் சோகமாகவே தன்னை காட்டிக்கொண்ட சந்தேக நபர் நடித்த நாடகம் கள்ளங்கபடம் இல்லாமல் பழகிய சியாமின் குடும்பத்தினரை தன் மீது சந்தேகப்படுவதிலிருந்தும் தூரப்படுத்தியது. எனினும் விசாரணைகளை தொடர்ந்த பொலிஸாருக்கு கிடைத்த ஆதாரங்கள் நட்பின் பெயரால் உயிர் குடித்த பாதகனே பகைவன் என அடையாளம் காட்டியது.
ஏன், எதற்கு, எப்படி கடத்தப்பட்டார் என்பது குறித்து எதுவுமே அறியாது சியாமை தேடிய குடும்பத்தினரின் கவனம் தன்மீது திரும்புவதை தவிர்க்கும் விதமாக கச்சிதமாக செயற்பட்டுள்ள சந்தேக நபர், சியாமை கப்பம் பெறும் நோக்கில் உயர்மட்டத்தினரே கடத்தியுள்ளதாக ஒரு மாயையையும் குடும்பத்தினரிடையே பரப்பத்தவறவில்லை.
சந்தேக நபர் பொலிஸாரிடம் ஆடிய நாடகம்
சியாம் காணாமல் போனமை தொடர்பில் பம்பலப்பிட்டி பொலிஸ் நிலையத்தில் செய்யப்பட்ட முதல் முறைப்பாட்டை கவனத்திற் கொண்ட பொலிஸாரிடம் சந்தேக நபர் தெரிவித்தவை மிகக்கவனமாக புனையப்பட்ட பொய்களாகும்.
பொலிஸாரிடம் அவர் தெரிவித்திருந்தவற்றின் சுருக்கம் இதுதான்.
'' 22ஆம் திகதி மாலை 5.45 மணியளவில் மஃரிப் தொழுகைக்காக சியாமும் நானும் பாத்திமா றோட்டில் உள்ள பள்ளிவாசலுக்கு போனோம். பின்னர் இஷா தொழுகைக்காக மயூரா பிளேஸில் உள்ள பள்ளிக்கு இருவருமே சென்றோம். இருவரும் அங்கு தொழுகையை நிறைவு செய்துவிட்டு பார்க் றோட்டில் உள்ள உம்மா வீட்டுக்குப் போனோம். அதன் பின்னர் பம்பலப்பிட்டி பிளா ஹவுஸில் இருவரும் மைலோ குடித்தோம். அத்துடன் அவர் வீடு நோக்கி புறப்பட்டார்.
சிறிது நேரத்தின் பின்னர் சியாமின் மனைவி எனக்கு அழைப்பினை ஏற்படுத்தினார். சியாமின் தொலைபேசி செயலிழந்துள்ளதாகவும் அவரிடம் கதைப்பதற்கு தொலைபேசியை கொஞ்சம் கொடுக்குமாறும் கூறினார். அப்போது சியாம் என்னுடன் இல்லை. அப்போதே சியாம் காணாமல் போயிருப்பதை என்னால் ஊகிக்க முடிந்தது'' என தெரிவித்துள்ளார்.
எவ்வாறாயினும் சியாம் காணாமல் போன விவகாரம் அரசின் உயர் மட்டத்தின் கவனத்திற்கு கொண்டு வரப்பட்டிருந்த நிலையில் விசாரணைகள் துரிதப்படுத்தப்பட்டன.
சந்தேக நபர் யார்?
ஒன்றாக உண்டு ஒன்றாக பழகி சியாமின் உயிருக்கு உலை வைத்ததாகக்கருதப்படும் அவரது நண்பர் தொடர்பில் பல விடயங்கள் தற்போது வெளிச்சத்துக்கு வருவதாக அவரது உறவினர்கள் தெரிவிக்கின்றனர்.
கொழும்பிலுள்ள பள்ளிவாசல் ஒன்றின் நிருவாக சபை உறுப்பினரே குறித்த சந்தேக நபர் என்பதை அறியும் போது பலர் பதைபதைத்துப் போயினர்.
பள்ளிவாசலின் நிருவாக சபையில் இருந்துகொண்டு இவர் மேற்கொண்டு வந்த பல சட்ட விரோத செயல்களும் சியாமின் குடும்பத்தினருக்கு தற்போது தெரிய வந்துள்ளது.
சியாம் கடத்தப்பட்டது எவ்வாறு?
சியாம் தனது பம்பலப்பிட்டி இல்லத்திலிருந்த போது அங்கு வந்துள்ள சியாமின் நண்பரான சந்தேக நபர் பிறிதொரு வர்த்தகரை சந்திக்கவென அவரை அழைத்துச் சென்றதாக தெரிய வருகிறது. அந்தத் தகவல்களின் பிரகாரம் நண்பரால் அழைத்துச் செல்லப்பட்ட வர்த்தகர் சியாம் மிரிஹான பிரதேசத்தில் வைத்து கொலைக்காக அமர்த்தப்பட்ட கூலிப்படையிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.
22 ஆம் திகதி இரவு சியாம் வாகனத்தில் குறித்த நண்பரால் அழைத்துச் செல்லப்படுவது மிரிஹான பிரதேச கண்காணிப்பு கமராக்களில் பதிவாகியுள்ளதாக தெரிய வருகிறது
.
கண்டுபிடிக்கப்பட்ட சியாமின் கார்
இந் நிலையிலேயே அநாதரவாக கைவிட்டுச் செல்லப்பட்டிருந்த கார் ஒன்றை மிரிஹான பொலிஸார் கடந்த 23 ஆம் திகதியளவில் மீட்டிருந்தனர். அந்தக் காரானது சியாம் பயணித்ததே என்பது தற்போது கண்டறியப்பட்டுள்ளதாகவும் விசாரணைகள் தொடர்வதால் குறித்த கார் தொடர்ந்தும் மிரிஹான பொலிஸ் நிலையத்தில் வைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிய வருகிறது.
மிரிஹான பிரதேச கண்காணிப்பு கமராக்களின் பதிவுகளின்படி சியாம் அவரது காரிலிருந்து இறக்கப்பட்டு பிறிதொரு ஜீப் வண்டிக்கு மாற்றப்படுவதும் பின்னர் சந்தேக நபரான நண்பர் தான் பயணித்த காரில் திரும்புவதும் பதிவாகியுள்ளதாக இதுவரை வெளிவந்துள்ள தகவல்களினூடாக அறிய முடிகிறது.
ஜனாஸா நல்லடக்கமும் சந்தேக நபர்களின் கைதும்
இந்நிலையில் கம்பஹா வைத்தியசாலையிலிருந்து கொண்டு வரப்பட்ட சியாமின் ஜனாஸா 31 ஆம் திகதி வெள்ளிக்கிழமை இரவு தெஹிவளை ஜும்ஆப்பள்ளி மையவாடியில் நல்லடக்கம் செய்யப்பட்டது.
ஜனாஸா நல்லடக்கத்தில் பெரும் திரளானோர் கலந்து கொண்டிருந்தனர். எவ்வாறாயினும் சியாமின் ஜனாஸா நல்லடக்கம் செய்யப்படுவதற்கு முன்பாகவே கொழும்பு குற்றத்தடுப்புப்பிரிவு சந்தேக நபரான நண்பரையும் பாதாள உலகத்தை சேர்ந்தவர்கள் எனக் கருதப்படும் மேலும் இருவரையும் கைது செய்திருந்தது.
இந்த சம்பவம் தொடர்பில் குறித்த மூவரும் கைது செய்யப்பட்டதை பொலிஸ் ஊடகப் பேச்சாளர் புத்திக சிறிவர்தன உறுதிப்படுத்தினார். சந்தேகநபர்கள் மீதான விசாரணையும் பல அதிர்ச்சித் தகவல்களை கசிய விட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
கொலைக்கான காரணம் என்ன?
கோடீஸ்வர வர்த்தகரான சியாம் கடத்தப்பட்டு கொலை செய்யப்படுவதற்கு கடன் விவகாரமே பிரதான காரணம் என விசாரணைகளில் தெரிய வந்துள்ளதாக பொலிஸ் தகவல்கள் தெரிவிக்கின்றன.
சுமார் 21 கோடி ரூபாவினை தனது நண்பரான சந்தேக நபருக்கு நட்பின் அடிப்படையில் சியாம் வழங்கியுள்ளதாகவும் அதனை திருப்பிக் கொடுக்காமல் இருப்பதற்காகவே பாதாள உலகக் குழுவினரின் உதவியுடன் குறித்த படுகொலை அரங்கேற்றப்பட்டுள்ளதாக விசாரணைகளில் தெரிய வந்துள்ளதாக கூறப்படுகிறது.
எவ்வாறாயினும் பாதாள உலகக் கோஷ்டியினரினால் புரியப்பட்ட இந்த படுகொலைக்கு பொலிஸாரின் உதவி பெறப்பட்டுள்ளதாகவும் அந்த தகவல்கள் தெரிவிக்கின்றன.
கொலையுடன் பொலிஸாருக்கு தொடர்பு?
இந்நிலையில் இந்தக்கொலையுடன் பொலிஸ் உயர்மட்ட அதிகாரி ஒருவருக்கு தொடர்பு உள்ளதாக சில ஊடகங்களில் வெளியாகியுள்ள செய்திகளும் கட்டுரைகளும் அதிர்ச்சியளிப்பனவாக உள்ளன.
ஏனெனில் சியாம் காணாமல் போனமை தொடர்பில் பம்பலப்பிட்டி பொலிஸ் நிலையத்தில் செய்யப்பட்ட முறைப்பாடு தொடர்பிலோ அல்லது தொம்பே பிரதேசத்தில் துப்பாக்கிச்சூட்டுக் காயங்களுடன் மீட்கப்பட்ட சடலம் தொடர்பான விபரங்களோ தினமும் ஊடகங்களுக்கு பொலிஸ் தலைமையகத்திலிருந்து வழங்கப்படும் ஊடக அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருக்கவில்லை என தொலைக்காட்சி ஊடகம் ஒன்று சுட்டிக்காட்டியுள்ளது.
வர்த்தகரான சியாமின் படுகொலைச் சம்பவம் தொடர்பான விசாரணைகளை கொழும்பு பிராந்திய சிரேஷ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர் அனுர சேனாநாயக்கவின் விசேட வழிகாட்டலின் கீழ் குற்றத்தடுப்பு பிரிவின் அதிகாரியான சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சர் ரணவீர தலை மையிலான குழுவினர் மேற்கொண்டு சந்தேக நபர்களை கைது செய்தனர்.
இது தொடர்பில் குற்றவாளிகளுக்கு தராதரம் பாராது அதிகபட்ச தண்டனை பெற்றுக்கொடுக்கப்பட வேண்டும் எனக் கூறும் சியாமின் பிரிவால் தவிக்கும் அவரது குடும்பத்தினர் இது விடயத்தில் அக்கறையுடன் செயற்பட்ட பொலிஸ் புலனாய்வுப்பிரிவு மற்றும் அரச உயர் மட்டத்தினருக்கும் தமது நன்றிகளையும் தெரிவிக்கின்றனர்.
இலங்கையைப் பொறுத்தவரை அண்மைக்காலமாக கொலைச் சம்பவங்கள் அதிகரித்துச் செல்வதை அவதானிக்க முடிகிறது. இந்த மோசமான கொலைக் கலாசாரத்திற்கு முற்றுப் புள்ளி வைத்து இந்த நாட்டுப் பிரஜைகள் அனைவரதும் பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டியது அரசாங்கத்தினதும் பாதுகாப்புத் தரப்பினதும் கடப்பாடாகும்.
30 வருட கால பயங்கரவாதத்துக்கு முற்றுப் புள்ளி வைத்த அரசாங்கத்திற்கு இதனைச் செய்வது ஒன்றும் பாரிய விடயமல்ல. ஆனால் இவ்வாறான சட்டவிரோத செயல்களுக்கு உயர் பதவிகளில் உள்ள ஒரு சிலர் உடந்தையாகவிருப்பதுதான் கவலைக்குரியதாகும்.
(06.06.2013 விடிவெள்ளி பத்திரிகையில் வெளியான கட்டுரை)
No comments