ரோஹிங்ய முஸ்லிம்கள் மீது கொடூர தாக்குதல்கள்
நூற்றுக்கும் மேற்பட்டோர் பரிதாபகரமாக பலி
ஆயிரக்கணக்கானோர் காடுகளுக்குள் தஞ்சம்
அகதிகளை ஏற்க பங்களாதேஷும் மறுப்பு தெரிவிப்பு
மியன்மாரில் வாழும் சிறுபான்மை ரோஹிங்யா முஸ்லிம்கள் மீது அந்நாட்டு இராணுவத்தினர் கடந்த சில நாட்களாக கண்மூடித்தனமான தாக்குதல்களை மேற்கொண்டுவருகின்றனர். இதில் சிக்குண்டு நூற்றுக்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதுடன் ஆயிரக்கணக்கானோர் பங்களாதேஷில் அடைக்கலம் கோரி தஞ்சமடைந்துள்ளனர். எனினும் நேற்று பங்களாதேஷும் ரோஹிங்யாக்களை திருப்பியனுப்பியுள்ளதாக சர்வதேச மனித உரிமை அமைப்புகள் சுட்டிக்காட்டியுள்ளன.
ராக்கைன் மாநிலத்தில் ஒடுக்கப்பட்டு வரும் ரோஹிங்யா முஸ்லிம்களை பயங்கர ஆயுதங்களால் மியன்மார் இராணுவம் கொன்றொழித்து வருவதாக ரோஹிங்யாக்களுக்காக குரல் கொடுக்கும் மனித உரிமை அமைப்புகள் குற்றம் சுமத்தியுள்ளன. இந்த தாக்குதல்களில் சிக்கி உயிரிழந்தோரின் எண்ணிக்கை 100ஐத் தாண்டியுள்ளதுடன் பல நூறு பேர் பாரிய வெட்டுக் காயங்களுக்கும் இலக்காகியுள்ளனர்.
அகதி முகாம்கள் உள்ளிட்ட ரோஹிங்யா முஸ்லிம்களின் இருப்பிடங்கள் இராணுவத்தினரால் தீ வைக்கப்பட்டு அழிக்கப்பட்டுள்ளதுடன் அங்கிருந்து பங்களாதேஷை நோக்கி காடுகள், ஆறுகள் வழியாக தப்பியோடிய ஆயிரக் கணக்கான முஸ்லிம்கள் மீது மியன்மார் இராணுவத்தினரும் ஆயுதந் தாங்கிய குழுக்களும் மோட்டார் குண்டுகளை வீசித் தாக்குதல் நடத்தியதாக பங்களாதேஷ் எல்லைக் காவல் படையினர் அல் ஜஸீராவுக்குத் தெரிவித்துள்ளனர்.
கடந்த வெள்ளிக்கிழமை அதிகாலை பொலிஸ் காவலரண்கள் மீது ரோஹிங்யா ஆயுத குழுவினர் தாக்குதல் நடாத்தியதாகவும் இதற்கு பதிலடியாகவே இராணுவம் பதில் தாக்குதல் நடாத்தி வருவதாகவும் மியன்மார் அரச தரப்பு தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த தாக்குதல் நடவடிக்கைகளின்போது சுமார் 10,000 ரோஹிங்யா முஸ்லிம்கள் இருப்பிடங்களை விட்டும் துரத்தியடிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
பள்ளிவாயல்களும் இஸ்லாமிய கல்வி நிலையங்களும் இராணுவத்தினரால் தீ வைத்து அழிக்கப்பட்டுள்ளன.
இராணுவத்தினர் வீடுகளுக்குள் புகுந்து சொத்துக்களை சூறையாடுவதாகவும் நாட்டை விட்டு வெளியேற நிர்ப்பந்திப்பதாகவும் ரோஹிங்யா முஸ்லிம்கள் தெரிவிக்கின்றனர்.
மியன்மார் அரசு இது தொடர்பில் எதுவித காத்திரமான நடவடிக்கைகளையும் எடுக்காது இனச்சுத்திகரிப்புக்கு மறைமுகமாக ஆதரவு வழங்குவதாக மனித உரிமை ஆர்வலர்கள் கருத்துத் தெரிவிக்கின்றனர்.
இராணுவத்தின் அட்டூழியங்கள் தாளாது, தங்களது இருப்பிடங்களில் இருப்பதற்கு அஞ்சி முதுகில் மூட்டைகளையும் கையில் குழந்தைகளையும் சுமந்த வண்ணம் காடுகளிலும் வயல் வெளிகளில் ரோஹிங்யா முஸ்லிம்கள் தஞ்சம் புகுந்துள்ளனர். இது தொடர்பிலான வீடியோ காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வருகின்றன.
கடந்த வருடம் ஒக்டோபர் மாதம் எல்லைக் காவலரண் தாக்குதலில் 9 பொலிசார் ரோஹிங்யா ஆயுததாரிகளால் கொல்லப்பட்டதாக குற்றம்சாட்டி ஆங்சாங் சூகி அரசு ராக்கைன் பிரதேசத்தில் ஆயிரக்கணக்கான இராணுவ துருப்புக்களை நிறுவியது. இந்த இராணுவ துருப்புக்கள் ராக்கைன் பகுதிகளில் வாழும் ரோஹிங்யா முஸ்லிம்கள் மீது கற்பழிப்பு, சொத்துக்களை சூறையாடுதல், தீ வைத்தல் என மனிதாபிமானமற்ற வகையில் அட்டூழியங்களை செய்து வருகின்றன. இவர்களின் கொடுமை தாளாது 87,000 ரோஹிங்யா முஸ்லிம்கள் பங்களாதேஷ் நாட்டில் அடைக்கலம் புகுந்துள்ளனர்.
மியன்மார் அரசின் ஆதரவில் மேற்படி இராணுவ அட்டூழியங்கள் இடம்பெறுவதாக மனித உரிமை ஆர்வலர்கள் குற்றம் சாட்டுகின்றனர். மேலும் ராக்கைன் பகுதியில் இடம்பெறும் மனித உரிமை மீறல்கள் தொடர்பில் ஐ.நா விசாரணைகளை மேற்கொள்ள மியன்மார் அரசு தொடர்ந்தும் மறுத்து வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.
Post Comment
No comments