8 இலட்சம் சிங்கள பெண்களால் மட்டுமே குழந்தை பெறக்கூடியதாக உள்ளது
கணக்குப் போடுகிறார் மெதகொட அபயதிஸ்ஸ தேரர்
ஒருகோடியே 30 இலட்சம் சனத்தொகை கொண்ட சிங்கள சனத்தொகையில் 10 இலட்சம் சிங்கள பெண்களே குழந்தைப் பெற்றுக்கொள்ளும் வயது மட்டத்தில் உள்ளனர்.எனினும் அவர்களில் 8 இலட்சம் பெண்களால் மட்டுமே குழந்தை பெறக்கூடியதாக உள்ளது என ஸ்ரீ ஜெயவர்த்தன புர பல்கலைக்கழகத்தின் விரிவுரையாளரும் பெப்பிலியான சுனேத்ரா தேவி பிரிவெனாவின் தலைவருமான மெதகொட அபயதிஸ்ஸ தேரர் தெரிவித்துள்ளார்.
மாத்தறையில் நடைபெற்ற மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கும் வைபவம் ஒன்றில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
மாத்தறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரான மைத்ரீ புத்திக்க பத்திரணவின் அழைப்பின் பேரில் குறித்த நிகழ்வில் கலந்து கொண்டுள்ள அபயதிஸ்ஸ தேரர் அங்கு மேலும் தெரிவித்துள்ளதாவது,
பயங்கரமான சூழலொன்றினை சிங்கள சமூகம் எதிர்கொண்டுள்ளது. இன்னும் 30/40 வருடங்களில் அது தெளிவாக விளங்கும். இதனை நான் கூறினால் இனவாதம் பேசுவதாக கூறுவர்.
கணக்குப் போட்டு பாருங்கள். இந்நாட்டின் சனத்தொகை கணிப்பை எடுத்து நோக்கினால் ஒரு கோடியே 30 இலட்சம் சிங்களவர்கள் இந்நாட்டில் உள்ளனர். அதில் 80 இலட்சம் பேர் 40 வயதை தாண்டியவர்களாவர். பெண்களை எடுத்துக்கொண்டால் பிள்ளைகளை பெற்றெடுப்போர் இன்னும் 40 ஆண்டுகளில் 80 இலட்சத்தால் குறைவடையப்போகிறது. எஞ்சுவது 50 இலட்சம் பேர் மட்டுமே.
இதில் 39 வயதான ஒருவருக்கு இன்னும் 40 ஆம்டுகளில் 79 வயதாகும். இந்த 50 இலட்சத்தில் அரைவாசி ஆண்கள் என்று வைத்துக்கொண்டால் பெண்களின் தொகை வெறும் 25 இலட்சமாகும்.இந்த 25 இலட்சத்தில் 5 இலட்சம் பேர்வரையில் தற்போது வரை குடும்ப கட்டுப்பாடு செய்துள்ளனர்.
நாட்டின் சட்டத்துக்கு அமைவாக 26 வயதுக்கு மேற்பட்ட திருமணமான பெண்களுக்கு எல்.ஆர்.டீ. முறையிலான கட்டுப்பாட்டினை செய்யமுடியும்.எனினும் இங்கு 20 இலட்சம் பெண்களே உள்ளனர்.
பெண்கள் 20 இலட்சம் இருந்தாலும் அதில் 10 இலட்சம் பேர் 20 வயதுக்கு கீழ் பட்டவர்கள். 20வயதுக்கு மேற்பட்டவர்கள் 10 இலட்சம் பேரே உள்ளனர்.
அதாவது பிள்ளைகளை பெற்றேடுக்கக்கூடிய நிலையில் 10 இலட்சம் பேரே உள்ளனர்.இதில் எத்தனை பெண்களுக்கு குழந்தை கிடைக்கும் . இன்று எத்தனை பெண்கள் செனல் செய்து பார்க்கின்றார்கள்? எனினும் அவர்களுக்கு குழந்தை இல்லை. அப்படியாயின் 8 இலட்சம் பெண்களால் மட்டுமே குழந்தை பெறக்கூடியதாக உள்ளது.
இந்நிலையில் இன்று உள்ள சிங்கள சனத்தொகையை பேண வேண்டுமாக இருந்தால் ஒருவர் 10 குழந்தைகளை பெறவேண்டும்.அப்போதே எமது சிங்கள சனத்தொகையின் அளவை பேண முடியும். ஏனெனில் இன்னும் 40 வருடங்களில் 80 இலட்சம் பேர் இறக்கப்போகின்றனர். ஒருவர் 10 குழந்தைகளை பெற்றால் மட்டுமே சனத்தொகை அளவினை சீராக பேண முடியும் என தெரிவித்துள்ளார்.
(VD)
Post Comment
No comments