சண்டைச் சச்சரவுகள் மலிந்துள்ள காலகட்டமொன்றில் வெசாக் அனுடிக்கப்படுகிறது : பான் கீ மூன்
உலகில் பரந்துபட்டுக் காணப்படும் சண்டைச் சச்சரவுகள், துன்ப துயரங்கள் மலிந்துள்ள காலகட்டமொன்றில் இந்த வருட வெசாக் அனுஷ்டானமானது தற்போதைய சாவல்களுக்கு எவ்வாறு பௌத்த போதனைகள் உதவ முடியுமென்பதைப் பரிசோதித்துப் பார்ப்பதற்கான தருணமாக வெசாக் பண்டிகையை அணுக வேண்டும் என ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் செயலாளர் பான் கீ மூன் தெரிவித்துள்ளார்.
வெசாக் தினத்தை முன்னிட்டு ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் செயலாளர் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியிலேயே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
அந்த அறிக்கையில் மேலும் இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
வெசாக் தினத்தை கொண்டாடி மகிழும் பௌத்த மக்களுக்கு எனது மனமார்ந்த நல்வாழ்த்துக்கள் உரித்தாகட்டும். சமாதானக் காற்றைச் சுவாசிப்பதற்கும், சண்டை சச்சரவை இல்லாமல் செய்வதற்கும் சாத்வீக உணர்வு எமக்குத் தேவைப்படுகிறது.
இந்தியாவில் கொடிய ஆட்சியை நடத்திய அசோக மன்னன் இறுதியில் யுத்தத்தின் கொடுரத்தன்மையை உணர்ந்து பௌத்தனாக மாறி வன்முறையைக் கைவிட்டு சமாதானத்தை நிலைநாட்டும் பொருட்டு அதனைத் தழுவிக் கொண்டான். அசோக மன்னனால் ஆதரிக்கப்பட்டு வந்த மனித உரிமைகள், ஜனநாயக ஆட்சி மற்றும் வாழ்க்கையின் கௌரவத்திற்கான கண்ணியம் ஆகியவை உள்ளிட்ட விழுமியங்கள் அனைத்து மதங்களுக்கும் பொதுவானவையாகவே உள்ளன.
வெசாக் தினமானது உலகளாவிய ரீதியில் வாழ்ந்து வரும் பௌத்தர்களுக்கு ஒரு கொண்டாட்டமாகவும:. அவர்களின் வளம்மிக்க பாரம்பரியங்களிலிருந்து சர்வதேச சமூகத்தின் அனைத்து உறுப்பினர்களும் நன்மை பெறுவதற்கான சந்தர்ப்பமொன்றாகவும் அமைகிறது. உலகை ஆக்கிரமித்துள்ள தொல்லைகொடுக்கும் பிரச்சினைகள் பௌத்தத்துடன் இசைந்தே போய்விடுகின்றன. இளவரசர் ஒருவரென்ற வகையில் புத்த பெருமான் நான்கு துன்பங்களான பிறப்பு, பிணி, மூப்பு, மரணம் ஆகியவற்றைக கண்டறியும் பொருட்டு தனது அரண்மனைப் பாதுகாப்பை விட்டுப் புறப்பட்டுச் சென்றார்.
அத்தகைய வேதனைதரும் யதார்த்த நிகழ்வுகள் தவிர்க்கப்பட முடியாதவையாகவுள்ள அதேசமயம் அவற்றை எவ்வாறு சமாளிப்பது என்பது குறித்து பௌத்த மதம் மக்களுக்கு பூரண அறிவை வழங்கி வருகிறது. அதன் வரலாறானது பௌத்த தத்துவத்தின் உரு மாற்றம் சக்தியின் உணர்ச்சியூட்டும் உதாரணங்களைத் தன்னகத்தே கொண்டுள்ளது.
வெசாக் தினத்தைக் கொண்டாடும் பௌத்த மக்களுக்கு எனது மனமார்ந்த நல்வாழ்த்துக்களைத் தெரிவிப்பதோடு, உலகத்தை முன்னேற்றும் பொருட்டு எமது மனோதிடத்தை மென்மேலும் பலப்படுத்திக் கொள்வதற்கு நாம் அனைவரும் ஆன்மீக நாட்டமுள்ள உயர்ந்த இலட்சியங்களால் நிரப்பப்படுவோம் என பூரணமாக நம்புகிறேன் என்று பான் கீன் மூன் வெளியிட்டுள்ள அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
No comments