மக்களின் அழுத்தம் காரணமாக அசாத் சாலியை அரசாங்கம் விடுதலை செய்துள்ளது – எதிர்க்கட்சித் தலைவர்
மக்களின் அழுத்தம் காரணமாக அசாத் சாலியை அரசாங்கம் விடுதலை செய்துள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
நேற்று வரையில் பயங்கரவாதியாகக் கருதப்பட்ட அசாத் சாலி, மக்கள் அழுத்தம் காரணமாக இன்று விடுதலை செய்யப்பட்டார்.
அரசியல்வாதிகளை கட்டுப்படுத்த அரசாங்கம் பயங்கரவாதத் தடைச் சட்டத்தை பயன்படுத்துகின்றது.
நாம் அனைவரும் ஒன்றிணைந்து குரல் கொடுக்கும்போது இந்த ராஜபக்ஷ றெஜினோல்டை வீழ்த்தமுடியுமென்பதை அஸாத் சாலியின் விடுதலை சுட்டிக்காட்டுகிறது. அதனடிப்படையில் 2014ஆம் ஆண்டு ஜனாதிபதி தேர்தலில் மக்கள் ஒன்றுதிரண்டு இந்த மஹிந்தவின் ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வைக்கவேண்டும் என தெரிவித்தார்.
புலனாய்வுப் பிரிவினரால் விடுவிக்கப்பட்ட அசாத் சாலி தனியார் வைத்தியசாலையொன்றில் சிகிச்சை பெற்று வருகின்றார்.
அசாத் சாலியை பார்வையிடச் சென்ற போது அங்கு குழுமியிருந்த ஊடகவியலாளர்களிடம் ரணில் விக்ரமசிங்க இதனைத் தெரிவித்துள்ளார. அஸாத் சாலியை எதிர்க்கட்சி பாராளுமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்ட பல அரசியல் பிரமுகர்கள் நவலோக தனியார் வைத்தியசாலையில் சந்தித்து கலந்துரையாடினர்.
எதிர்க்கட்சி தலைவர் ரணில் விக்கிரமசிங்க தலைமையில் பிற்பகல் 3.57 க்கு நவலோக வைத்தியசாலைக்கு வருகைதந்த அக்கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்களான திஸ்ஸ அத்தநாயக்க, ரவி கருணாநாயக்க உள்ளிட்ட குழுவினர் சுமார் 15 நிமிடங்கள் வரை அஸாத் சாலியுடன் உரையாடினர்.
முன்னதாக அஸாத் சாலி நவலோக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதை அறிந்ததும் ஜனநாயக மக்கள் முன்னணியின் தலைவர் மனோ கணேசன், சிறிதுங்க ஜயசூரிய உள்ளிட்ட அரசியல் தலைவர்களும் வைத்தியசாலையில் உடனிருந்தனர். அஸாத் சாலியுடன் நாட்டின் நல்லிணக்கம் தொடர்பிலும் அதிகாரத்தை பகிர்வது தொடர்பிலும் தாம் இணைந்து செயற்பட்டதையும் சுட்டிக்காட்டிய மனோ கணேசன் அஸாத் சாலியின் உடல்நலம் தொடர்பிலும் விசாரித்து அறிந்து கொண்டார். எவ்வாறாயினும் அங்கு ஊடகங்கள் முன் கருத்துதெரிவித்த சிறிதுங்க ஜயசூரிய அஸாத் சாலி எவ்வித குற்றமும் செய்யாத நிலையில் கைதுசெய்யப்பட்டதாகவும் அதேபோன்றே நிபந்தனைகள் எதுவுமின்றி விடுதலை செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.
அத்துடன், அரசாங்கம் நிர்ப்பந்தத்தின் அடிப்படையில் அஸாத் சாலியை விடுதலை செய்துள்ளதாகவும் ஒருபோதும் அஸாத் சாலி ஜனாதிபதியிடம் மன்னிப்புக்கோரவில்லையென சுட்டிக்காட்டிய அவர் விரைவில் அஸாத் சாலி சுகம் அடைந்ததும் அது தொடர்பில் விளக்குவார் என தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.
No comments