அமரிக்க விஜயத்தின் பின் பொது பல சேனா வெளியிடும் கருத்துக்கள் அபாயகரமானவை : என்.எம். அமீன்
பௌத்த சிங்கள கடும்போக்கு அமைப்பான பொதுபல சேனா அமெரிக்கா சென்று வந்த பின்னர் அவர்களிடமிருந்து வெளிப்படும் கருத்துக்கள் அபாயகரமானவையாக இருக்கிறது எனவும், கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் பொதுபல சேனா தெரிவித்துள்ள கருத்துக்கள் இதற்கு ஆதாரமாக அமைகிறது எனவும் என முஸ்லிம் கவுன்சில் தலைவர் என்.எம்.அமீன் தெரிவித்தார்.
“முஸ்லிம் சமூகத்திலுள்ள தனிநபர் செய்யும் காரியங்களுக்கு அல்லது தவறுகளுக்கு ஒட்டு மொத்த முஸ்லிம் சமூகம் மீதும் பொதுபல சேனா குற்றம் சுமத்தும் செயற்பாட்டில் ஈடுபட்டுள்ளது.
பாபுல் பாகிஸ்தான் நாட்டிலிருந்து இறக்குமதி செய்யப்படுகிறது என்பதற்காகவோ அல்லது அதனை ஒரு சில முஸ்லிம்கள் விற்பனை செய்கிறார்கள் என்பதற்காகவோ ஒட்டுமொத்த இலங்கை முஸ்லிம்களையும் குற்றம் சுமத்துவது சிறந்ததல்ல.
அரசாங்க நிறுவனங்களில் முஸ்லிம்கள் தமது மார்க்கம் அனுமதித்த ஆடைகளை அணிந்து பணியாற்ற அனுமதியளிக்கப்பட்டுள்ளது. தொழில் உரிமை மறுக்கப்படும் போது நீதி கேட்கவும் முஸ்லிம்களுக்கு அனுமதியுள்ளது.
இருந்தபோதும் முஸ்லிம்களின் உரிமைகளில் தலையீடு செய்யும் விவகாரத்தை பொதுபல சேனா தற்போது கையிலெடுத்திருப்பது தெளிவாகிறது. சிங்கள சமூகத்தினரிடையே முஸ்லிம்கள் குறித்து தவறான அபிப்பிராயங்கள் மேலோங்க இது வழிவகுக்கும்.
இந்நிலையில் முஸ்லிம்களின் ஒன்றுபட்ட செயற்பாடுகள் காரணமாகவே இவற்றை முறியடிக்கமுடியும். பௌத்தசிங்கள பேரினவாதிகளிடமிருந்து வெளிப்படும் அண்மைக்கால செயற்பாடுகள் குறித்து முஸ்லிம் சமூகம் நிதானத்துடன் செயற்படுவது அவசியம்” எனவும் அவர் குறிப்பிட்டார்.
No comments