Breaking News

ரோஹிங்கியா முஸ்லிம்கள் குடும்பக் கட்டுப்பாடு செய்துகொண்டால் கலவரம் அடங்கும்-விசாரணை கமிஷனின் விசித்திரமான பரிந்துரை!

rohயங்கூன்:மியான்மரில் வகுப்புவாத கலவரங்களை கட்டுப்படுத்த ரோஹிங்கியா முஸ்லிம்களிடையே குடும்பக்கட்டுப்பாடு திட்டத்தை அமல்படுத்தவேண்டும் என்று அரசு நியமித்த விசாரணை கமிஷன் விசித்திரமான பரிந்துரையை அளித்துள்ளது.

மியான்மரில் முஸ்லிம்களுக்கு எதிரான புத்த தீவிரவாதிகள் நடத்திய கலவரம் குறித்து விசாரணை

நடத்த அரசு கமிஷன் ஒன்றை நியமித்தது. இக்கமிஷன் நேற்று முன் தினம் அறிக்கையை சமர்ப்பித்தது. இவ்வறிக்கையில் முஸ்லிம்களின் மக்கள் தொகை அதிகரிப்பதே புத்த மதத்தினருடன் மோதல் உருவாக காரணம் என்று கூறப்பட்டுள்ளது. மேலும் முஸ்லிம்கள் வசிக்கும் பகுதிகளில் பாதுகாப்பு படையினரின் எண்ணிக்கையை இரண்டு மடங்காக அதிகரிக்கவேண்டும் என்றும் கமிஷனின் அறிக்கை பரிந்துரைக்கிறது.

அதேவேளையில் வீட்டை இழந்து துயரத்தில் வாடும் ஒன்றேகால் லட்சத்திற்கும் அதிகமான ரோஹிங்கியா முஸ்லிம்களின் மறுவாழ்வுக்குறித்து எந்தவொரு பரிந்துரையையும் கமிஷன் அறிக்கையில் கூறவில்லை. முஸ்லிம்களின் குடியுரிமை தொடர்பான பிரச்சனைகள் எதனையும் கமிஷன் சுட்டிக்காட்டவில்லை என்று எ.எஃப்.பி செய்தி நிறுவனம் கூறுகிறது.

மியான்மரில் 135 இனங்கள் அதிகாரப்பூர்வமாக அங்கீகரிக்கப்பட்டபோதும் ரோஹிங்கியா முஸ்லிம்களை குடிமக்களாக அங்கீகரிக்க மியான்மர் அரசு மறுத்து வருகிறது. பிரச்சனைக்கு தீர்வு காண நியமிக்கப்பட்ட அரசு கமிஷனின் அறிக்கை முழுவதும் ’ரோஹிங்கியா’ என்ற வார்த்தையை பிரயோகிக்காமல் ’வங்காளிகள்’ என்ற வார்த்தையை பிரயோகிக்கப்பட்டுள்ளது.

No comments