ஒபாமாவை விட மஹிந்தவுக்கே அதிகம் - ரணில்
இலங்கைக்கு புதிய அரசியல் யாப்பு உருவாக்குவது தொடர்பில் மக்கள் கருத்தறியவென இணையத்தளம் ஒன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளது. குறித்த இணையத்தளம் எதிர்கட்சித் தலைவர் ரணில் விக்ரமசிங்கவால் இன்று ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமையகத்தில் ஆரம்பித்து வைக்கப்பட்டது. இந்நிகழ்வில் உரையாற்றிய எதிர்க்கட்சித் தலைவர், 'தாதுசேனன், மகாசேனன், பராக்கிரமபாகு ஆகியோர் இணைந்து கட்டிய குளங்களுக்கு அதிகமாக ஜே.ஆர்.ஜெயவர்த்தன குளங்களை கட்டியுள்ளார். மகாவெலி போன்ற பாரிய திட்டங்களை செயற்படுத்த அன்று நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமை பயன்படுத்தப்பட்டது.
1978ம் ஆண்டு நிறைவேற்று அதிகார ஜனாதிபதி பதவியை ஏற்படுத்தி அரசு பிரதானி, நிறைவேற்று பிரதானி, அரசாங்க பிரதானி போன்ற அதிகாரங்களை ஒன்றிணைத்தது அபிவிருத்தியில் பாரிய மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும் என்ற நிலையின் கீழாகும். அப்போது காலத்திற்கு ஏற்றவாறு செயற்பட்டோம். நாட்டுக்கு ஜனாதிபதி, பிரதமரை அறிமுகப்படுத்திய ஐக்கிய தேசியக் கட்சி நாட்டில் மக்கள் விருப்பத்திற்கு அமைய மாற்றத்தை ஏற்படுத்த நடவடிக்கை எடுக்கும். அன்று ஜனாதிபதியும் நீதிமன்றமும் இணைந்து பாராளுமன்றை பலமிழக்கச் செய்துள்ளனர். இன்று ஜனாதிபதி பாராளுமன்றுடன் இணைந்து நீதிமன்றை பலமிழக்கச் செய்தார்.
அதன்படி இன்று பாராளுமன்றம், நீதிமன்றம், மனித உரிமை, வாக்குரிமை போன்ற அனைத்தும் பலமிழத்துள்ளன. பராக் ஒபாமாவைவிட அதிக வசதிகள் இன்றைய ஜனாதிபதிக்கு உள்ளது. எனவே ஜனாதிபதி மாத்திரம் வெற்றியடைந்துள்ளார். நாட்டு மக்கள் தோல்வியடைந்துள்ளனர் என எதிர்கட்சித் தலைவர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.
Post Comment
No comments