ஜனநாயக ரீதியில் போராடுவோர்க்கு எதிராக பயங்கரவாத தடைச் சட்டம் : சுமந்திரன் எம்.பி.
அரசாங்கத்திற்கு எதிராக ஜனநாயக வழியில் போராடுகின்ற அனைவருக்கும் எதிராக தற்போது பயங்கரவாத தடைச் சட்டம் பிரயோகிக்கப்படுகின்றதென தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ சுமந்திரன் தெரிவித்தார்.
கொழும்பு பான்ஸ் பிளேஸில் இன்று புதன்கிழமை இடம்பெற்ற அதிகாரத்தைப் பகிர்ந்து நாட்டைக் கட்டியெழுப்பும் அமைப்பின் ஊடகவியலாளர் மாநாட்டில் கலந்து கொண்டுகருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்,
அரசாங்கத்திற்கு எதிராக ஜனநாயக ரீதியில் போராடும் அனைவருக்கும் எதிராக பயங்கரவாத தடைச்சட்டம் பிரயோகிக்கப்படுகின்றது. அந்த வகையிலேயே வாய்ப் பேச்சால் எச்சரிக்கை விடுத்த அசாத் சாலிக்கும் அது பிரயோகிக்கப்பட்டுள்ளது.
அசாத் சாலி ஏற்கனவே முன் பிணை பெற்றிருந்ததால் பிணை கொடுக்க முடியாத பயங்கரவாத தடைச்சட்டத்தை பிரயோகித்து அவரை தற்போது கைது செய்துள்ளனர்.
அரசாங்கம் மக்களை அச்சுறுத்தும் வழியில் செயற்பட்டால் மக்கள் போராட முனைவார்கள் என்று தான் அசாத் சாலி எச்சரிக்கை விடுத்தார். இவ்வாறு நாளை எனக்கோ அல்லது உங்களுக்கோ எதிராக பயங்கரவாத தடைச்சட்டம் பிரயோகிக்கப்படலாம். பயங்கரவாத தடைச்சட்டத்தை நீக்குமாறு பல ஐ.நா. குழுக்கள் அரசாங்கத்திற்கு அழுத்தம் கொடுத்தன. ஆனால் அரசு அவசரகாலச் சட்டத்தை நீக்கிவிட்டு பயங்கரவாத தடைச்சட்டத்திற்கு வலுக்கூட்டி அதை அமுல் படுத்தியுள்ளது.
நாட்டில் இடம்பெறும் கொடுங்கோல் ஆட்சிக்கு எதிராக நாம் எல்லோரும் போராட வேண்டுமென அவர் மேலும் தெரிவித்தார்.
(VK)
No comments