அமெரிக்க தொழில்நுட்பத்தோடு பொதுபல சேனா நடிக்கும் இரண்டாம் பாகம்
இலங்கையில் பௌத்த இனவாதிகள் சிறுபான்மை முஸ்லிம்களுக்கு எதிராக பல வழிகளிலும் மோசடிகளில் ஈடுபட்டு வருகின்ற அதேவேளை, மிகவும் பாரதூரமான மோசடிகளில் ஒன்றாக இலங்கை முஸ்லிம்களின் 1000 வருடங்களுக்கு மேலான வரலாற்றை இல்லாதொழிக்கும் முகமாக நாட்டில் இருக்கின்ற முஸ்லிம்களின் வரலாற்றுத் தடையங்கள் அனைத்தையும் திட்டமிட்டு அழித்து வருகிறது.
அதன் ஒரு அங்கமாகவே ஜெய்லானி பிரதேசத்தில் அமைந்திருந்த சுமார் 1200 வருடங்கள் பழைமை வாய்ந்த (ஹிஜ்ரி 300) வரலாற்றைப் பறைசாற்றும் கல் ஒன்றையும் தற்போது தகர்த்துள்ளார்கள். ஒரு சமூகத்துக்கு இழைக்கப்படுகின்ற பெரும் அநியாயங்களில் ஒன்றுதான் அதன் வரலாற்றுத் தடையங்களை இல்லாதொழித்து வரலாற்ற அனாதைச் சமூகமாக மாற்றி விடுவது.
வரலாறு இல்லாது செய்யப்பட்ட பர்மா, ரோகிங்க்யா முஸ்லிம்கள் அதன் விளைவாக சந்தித்து வருகின்ற கொடூரங்களை எமது மனத்திரைக்கு கொண்டு வருவோமாக இருந்தால் இம்மோசடியின் ஆழ அகலங்களை நன்றாகவே புரிந்து கொள்வோம். தற்போது நாட்டு முஸ்லிம்களின் வரலாற்றை திரிபுபடுத்தும் காரியத்தில் இறங்கியுள்ள இவர்கள் சிங்கள பாடப் புத்தகங்களிலும், வரலாறு சார்ந்த புத்தகங்களிலும் இலங்கையில் முஸ்லிம்களின் வரலாறு சுமார் 400 – 450 வருடங்கள் மட்டுமே எனும் மாயையை உற்புகுத்த முயற்சித்து வருவதாக நம்பகமான வட்டாரங்களிலிருந்து செய்திகள் கசிந்துள்ளன.
இதற்கு வலுச்சேர்க்கும் விதத்திலேதான் அமைச்சரும் இனவாதியுமான சம்பிக்க ரணவக்க, பாராளுமன்ற உறுப்பினர் அத்துரெலிய ரத்ன தேரோ போன்றவர்கள் சென்ற மாதங்களில் இக்கருத்தை ஊடகங்கள் வாயிலாக பகிரங்கமாகவே கூறியிருந்தனர். அதேபோன்று நாட்டின் தேசிய பத்திரிகைகளிலும் இலங்கை முஸ்லிம்களுக்கு மிகவும் குறுகியகால வரலாறே இருப்பதாகவும், முஸ்லிம்கள் கூறுவது போன்று 1000 வருடங்களுக்கு மேலான வரலாறு அவர்களுக்கு இருப்பதென்பது சுத்தப்பொய் என்றும் தொடர்ச்சியாக கட்டுரைகளை எழுதி வருகிறார்கள்.
அத்தோடு நில்லாமல் இலங்கையின் பண்டையகால வரலாற்றைக் குறிப்பிடுகின்ற மகா வம்சத்திலோ, சூள வம்சத்திலோ, தீப வம்சத்திலோ முஸ்லிம்களுக்கு 1000 வருட கால வரலாறு இருப்பதாக தெளிவாக எதுவும் சொல்லப்படவில்லை என நுனிப்புல் மேய்ந்துவிட்டு அல்லது வேண்டுமென்றே மனமுரண்டாக பொய்யான கருத்தை முன் வைக்கிறார்கள். இலங்கை முஸ்லிம்களுக்கு நீண்டகால வரலாறு இருப்பதாக கூறப்படுகின்ற புத்தகங்களின் எந்தச் செய்திகளும் அடிப்படை மூல ஆய்வு நூல்களில் இருந்து திரட்டப் பட்டவை அல்ல என்றும் இரண்டாம் தர ஆய்வு நூல்களிலிருந்தே திரட்டப்பட்டுள்ளன என்றும் பிறிதொரு குற்றச்சாட்டையும் முன்வைக்கிறார்கள்.
இறைவனின் உதவியால் நாட்டில் திறமையான சில முஸ்லிம் வரலாற்று ஆய்வாளர்கள் பல்கலைக்கழகங்களில் விரிவுரையாளர்களாகவும், சில கல்விசார் அலுவலகங்களில் உயர் பதவிகளிலும் பணியாற்றிக் கொண்டிருக்கிறார்கள். அவர்கள் இச்சர்ச்சையின் உண்மை நிலையை வெளிக்கொணர்ந்து எமது நீண்டகால வரலாற்றில் எவரும் எப்போதும் மூக்கை நுழைக்க இடமளிக்காதவாறு பலமான மூல ஆதாரங்களுடன் முதற்தர ஆய்வு நூலொன்றை வெளியிட வேண்டிய கட்டாய நிலைக்கு தற்போது நாம் தள்ளப்பட்டுள்ளோம். அப்பணியை அத்துறை சார்ந்தோர் உடனடியாக ஆரம்பிக்க வேண்டும்.
அடுத்து பொதுபல சேனா நடித்து முடித்து திரையிட்ட படத்தின் பாகம் ஒன்று படுதோல்வியில் முடிந்துள்ள இவ்வேளையில், இரண்டாம் பாகத்தை அமெரிக்க தொழில்நுட்பங்களோடு நடிப்பதற்கு தற்போது களத்தில் குதித்துள்ளார்கள். அல்லாஹ்விடம் இறைஞ்சி கண்ணீர் வடித்து, தடால் பாடல் இன்றி நாம் மேற்கொண்ட அறிவு ரீதியான, சாத்வீக அடிப்படையிலான முயற்சிகளே முதற் சுற்றில் எமக்கு வெற்றியைத் தந்தது.
இறைவனுடனான நெருக்கத்தை மேலும் பலப்படுத்திக் கொண்டு இப்போதைக்கு அதேபாணியில் பயணித்து இரண்டாம் சுற்றிலும் வெற்றிபெற அல்லாஹ் அருள் புரிவானாக. எமது போராட்ட வடிவை மேற்சொன்ன அதே பாணியில்தான் தொடந்து கொண்டுசெல்ல வேண்டும் என்பது இதன் அர்த்தமல்ல. நிலைமை மோசமாகும் என்றிருந்தால் (அல்லாஹ் பாதுகாக்க வேண்டும்) எமது போராட்ட வடிவங்களை நிலைமைக்கு ஏற்ப மாற்றியமைக்கலாம். இதை விடவும் மிகவும் பலமான நிலையில் காடைத்தனம் பண்ணிய சக்திகளையெல்லாம் அல்லாஹ் முகவரி இல்லாத அளவு துவம்சம் செய்திருக்கிறான்.
ஆனால் அப்போதெல்லாம் முஸ்லிம்களின் அல்லாஹ்வுடனான உறவுகள் மிகவும் சீராக பேணப் பட்டுவந்திருக்கின்றன என்பதை நாம் கவனத்திற் கொள்ள வேண்டும்.
(அஷ்ஷெய்ஹ் MZM ஷபீக் (Bahji, Mazhaahiri) UK)
நன்றி : நவமணி
No comments