எங்களைப் பயங்கரவாதிகளாக்காதீர்! அசாத் சாலி
ஜனநாயகத்தை நேசிக்கும் தம்மை பயங்கரவாதியாக்கி, பயங்கரவாதியை ஜனநாயகவாதியாக சித்தரிக்க வேண்டாம் என கொழும்பு மாநகர சபையின் முன்னாள் பிரதிமேயர் அசாத்சாலி தெரிவித்துள்ளார்.
கொழும்பு மாநகர சபையின் முன்னாள் பிரதி மேயர் அசாத் சாலி கைதுசெய்யப்பட்ட சந்தர்ப்பத்தில் நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்டிருந்த அடிப்படை மனித உரிமை மனு நேற்று (28) சட்டத்தரணி ரி.சி. வெலியமுனவினால் மீளப்பெறப்பட்டது.
மூன்று நீதியரசர்கள் முன்னிலையில் இந்த மனுவிசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டபோதே மனுவைத் மீளப்பெறுவதாக சட்டத்தரணி அறிவித்தார்.
இந்த வழக்கு விசாரணைக்கு நீதிமன்றம் வந்து வீடு திரும்ப முன்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும்போதே அசாத் சாலி இதனைத் தெரிவித்தார்.
ஊடகங்களுக்கு கருத்துரைத்த அசாத் சாலி
”அரசாங்கத்திற்கு நான் ஒன்றைக் கூற விரும்புகிறேன். நாம் அரசியல் செய்வோம். நாட்டை ஐக்கியப்படுத்தும் வேலைத் திட்டத்தை நாம் முன்னெடுப்போம். எங்களைப் பயங்கரவாதிகளாக்காதீர்கள். தற்போது எந்தவொரு பயங்கரவாதிக்கும் இந்த நாட்டிற்கு வந்து வாக்குமூலமளித்து, நல்ல மனிதராகி, தற்போது வடக்கு மாகாணத்தில் போட்டியிடுவதற்கும் தயாராகியுள்ளார். இவ்வாறான தருணத்தில் இந்த நாட்டில் ஜனநாயகத்திற்கு மதிப்பளிக்கும் நபரை பயங்கரவாதியாக்கி, பயங்கரவாதியை ஜனநாயகவாதியாக அடையளப்படுத்த முயற்சிக்க வேண்டாம் என்றே அரசாங்கத்திடம் கேட்டுக்கொள்கிறேன்” என அசாத் சாலி தெரிவித்தார்.
விடுதலைப் புலிகளின் முன்னாள் ஆயுத விநியோகத்தரும், சர்வதேச பொறுப்பாளருமாக செயல்பட்ட குமாரன்பத்மநாதன் என்ற கே.பி. தற்போது அரசாங்கத்தின் அரசியல் விருந்தாளியாக இருந்து வருகிறார்.
கே.பி. தற்போது வடக்குத் தேர்தலில் களமிறக்கப்படக்கூடும் என்ற தகவல்கள் வெளியாகியுள்ள நிலையில், அசாத் சாலி, குமரன் பத்மநாதனையே மறைமுகமாக சுட்டிக்காட்டியுள்ளார் என்பதும் அனைவருக்கும் தெரிந்ததே.
Post Comment
No comments