புலனாய்வுத் தகவல்களைப் பகிரவேண்டும்: தாய்லாந்திடம் ஜனாதிபதி கோரிக்கை
மூன்று நாள் உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு இலங்கை வந்திருக்கும் தாய்லாந்துப் பிரதமர் யிங்லக் ஷினவாத்ரா இன்று காலை ஜனாதிபதி அலுவலகத்தில் வைத்து ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை சந்தித்தார். இச்சந்திப்பின்போது தாய்லாந்து மற்றும் இலங்கைக்கிடையில் பாதுகாப்பு மற்றும் கடல்சார் பாதுகாப்பு விடயங்களில் கூட்டுறவை மேம்படுத்த இரு நாட்டு தலைவர்களும் இணக்கம் தெரிவித்தனர்.
2009ஆம் ஆண்டு நாட்டில் யுத்தம் முடிவுக்கு வந்தபோதும் எல்.ரீ.ரீ.ஈ. ஆதரவாளர்கள் வெளிநாடுகளில் இருந்துகொண்டு நாட்டைத் துண்டாடுவதற்கு தொடர்ந்தும் முயற்சித்து வருகின்றனர் என சுட்டிக்காட்டிய ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, அனுபவங்களையும் நிபுனத்துவத்தையும் பகிர்ந்துகொள்வது பிராந்தியத்தில் பயங்கரவாதத்தையும் ஏனைய பாதுகாப்பு அச்சுறுத்தல்களையும் ஒழித்துக்கட்ட உதவும் என தெரிவித்தார்.
பாதுகாப்பு மற்றும் புலனாய்வுத் தொடர்பான தகவல்களைப் பகிர்ந்துகொள்வதில் நாம் நெருங்கிப் பணியாற்றவேண்டும் என்றும் ஜனாதிபதி மேலும் தெரிவித்தார். ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் தலைமைத்துவத்தின் கீழ் பயங்கரவாதத்தை முற்றாக ஒழித்துக்கட்டிய இலங்கை அரசாங்கத்திற்கு தனது பாராட்டுக்களைத் தெரிவித்த தாய்லாந்துப் பிரதமர் ஷினவாத்ரா, இலங்கையை ஒரு சமாதானமும் சுபீட்சமும் நிறைந்த நாடாக ஆக்குவதற்கான ஒத்துழைப்பை தாய்லாந்து தொடர்ந்தும் வழங்கும் எனத் தெரிவித்தார்.
19ஆவது மற்றும் 22ஆவது ஐ.நா. மனித உரிமைகள் பேரவைக் கூட்டங்களின்போது இலங்கைக்கு தாய்லாந்து வழங்கிய உறுதியான ஆதரவுக்கு ஜனாதிபதி தமது நன்றிகளைத் தெரிவித்தார்.
இருநாடுகளுக்குமிடையிலான வர்த்தக உறவுகளை மேம்படுத்துவது குறித்தும் இரு தலைவர்களும் கலந்துரையாடினர். இலங்கை அரசாங்கத்தின் கடனீட்டுப் பத்திரங்களில் முதலிட முன்வருமாறு தாய்லாந்து அரசாங்கத்திற்கு அழைப்புவிடுத்த ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ சிறிய மற்றும் நடுத்தர தொழிற்துறையில் அதிக வர்த்தக வாய்ப்புகளை ஊக்குவிப்பதில் தாய்லாந்துடன் நெருங்கிப் பணியாற்ற விரும்புவதாகவும் தெரிவித்தார்.
மேற்படி இருதரப்பு பேச்சுவார்த்தைகளைத் தொடர்ந்து குடிவரவு, சுற்றுலா, விஞ்ஞான, தொழிநுட்பக் கூட்டுறவு, வர்த்தகம் மற்றும் வங்கியியல் ஆகிய துறைகளில் பல்வேறு புரிந்துணர்வு உடன்படிக்கைகளில் இரு நாடுகளும் கைச்சாத்திட்டன.
இலங்கையில் சியாம் நிகாய தாபிக்கப்பட்டு 260 ஆண்டுகள் நிறைவடைவதை முன்னிட்டு திட்டமிடப்பட்டுள்ள பல்வேறு நடவடிக்கைகளின் ஒரு பகுதியாகவே தாய்லாந்துப் பிரதமரின் இவ்விஜயம் அமைந்துள்ளது. தாய்லாந்துப் பிரதிநிதிகள் குழுவில் பதில் பிரதமரும் வெளிவிவகார அமைச்சருமான சுரபொங் டொவிசக்சைக்குல் உட்பட பல்வேறு அரசாங்க உயரதிகாரிகளும் இடம்பெற்றிருந்தனர்.
இலங்கைக் குழுவில் பிரதமர் தி.மு ஜயரத்ன, அமைச்சர்களான ஜீ.எல். பீரிஸ், டக்லஸ் தேவானந்த, பசில் ராஜபக்ஷ, ராஜித சேனாரத்ன, நிருபமா ராஜபக்ஷ, பாடலி சம்பிக ரணவக, ரிஷாத் பதியுதீன் மற்றும் பிரியங்கர ஜயரத்ன, பாராளுமன்ற உறுப்பினர் சஜின் டி வாஸ் குணவர்தன, ஜனாதிபதியின் செயலாளர் லலித் வீரதுங்க, அமைச்சரவை செயலாளர்களான கருணாதிலக அமுனுகம, பீ.பீ. ஜயசுந்தர, மற்றும் அநுர சிரிவர்தன, பணிக்குழாம் தலைவர் காமினி செனரத், மத்திய வங்கி ஆளுநர் அஜித் நிவாட் கப்ரால் மற்றும் தாய்லாந்துக்கான இலங்கைத் தூதுவர் ஜெனரல் எஸ்.எச்.எஸ் கொட்டேகொட ஆகியோரும் இடம்பெற்றிருந்தனர்.
(ஜனாதிபதியின் ஊடகப்பிரிவு)
(VD)
Post Comment
No comments