அச்சுறுத்தல் காரணமாக கொழும்பில் பல இறைச்சிக் கடைகளுக்கு பூட்டு?
மாடறுப்பதற்கு எதிரான பிரசாரங்கள் பலமாக முன்னெடுக்கப்பட்டு வரும் நிலையில் கடந்த சில தினங்களாக கொழும்பின் பல பகுதிகளிலும் இறைச்சிக் கடைகள் மூடப்பட்டிருந்ததாக கொழும்பு ஆங்கில ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
தேரர் ஒருவர் கடந்த வெள்ளிக்கிழமை தீக்குளித்ததைத் தொடர்ந்து பல கடும்போக்கு அமைப்புகள் இறைச்சிக்கடைகளுக்கு அச்சுறுத்தல்களை விடுத்து வருவதாகவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறிப்பாக கொழும்பு மருதானையில் உள்ள நான்கு இறைச்சிக்கடைகள் நேற்றைய தினம் மூடப்பட்டிருந்ததாகவும் தெமடகொட, பம்பலப்பிட்டிய, வெள்ளவத்தை, முகத்துவாரம்,ஆமர் வீதி, கொட்டாஞ்சேனை, மட்டக்குளி ஆகிய பகுதிகளிலுள்ள பல இறைச்சிக்கடைகள் மூடப்பட்டிருந்ததாகவும் அச் செய்தியில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இருப்பினும், இது தொடர்பில் கருத்து வெளியிட்டுள்ள கொழும்பு மாநகர சபையின் தலைமை மிருக வைத்திய அதிகாரி எம்.பி. தர்மவர்தன, வெசாக் காலத்தை முன்னிட்டே இவ்வாறு இறைச்சிக் கடைகள் மூடப்பட்டுள்ளதாகவும் கடைகளை மூடுமாறு எவரும் அச்சுறுத்தல் விடுக்கவில்லை எனவும் தெரிவித்துள்ளார்.
கடந்த வெள்ளிக்கிழமை தேரர் தீக்குளித்ததைத் தொடர்ந்து கொள்ளுப்பிட்டியில் உள்ள இரு இறைச்சிக் கடைகள் மீது பௌத்த பிக்குகள் தலைமையிலான குழுவினர் தாக்குதல் நடத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
Post Comment
No comments