புத்தரின் போதனைகளை பின்பற்ற முஸ்லிம்கள் தயார்;பௌத்தர்கள் தயாரா?
புத்தமதம் நாடு மற்றும் கலாசார அடிப்படையில் இரண்டு முக்கிய பிரிவுகளையும் பல துணைப் பிரிவுகளையும் கொண்டது. புத்த தர்மத்தின் அடிப்படை நம்பிக்கைகள்:
‘‘ மூன்று நகைகள் (Jewels), நான்கு உன்னத உண்மைகள் (Noble truths), எட்டு மடிப்புப்பாதை (Eight foldparth), ஐந்து கட்டளைகள் (Precepts) ஆகியவற்றைக் கொண்டது. புத்தா, தர்மா (போதனைகள்) சங்கா (சமூகம்) என்பன மூன்று நகைகளாகும்.
* நான்கு உன்னத உண்மைகளை துன்பங்களின் பொதுமைப்பாடு, துன்பங்களின் தோற்றம், துன்பங்களை விட்டும் உயிர்த்தெழுதல், துன்பங்களை விட்டு மீளுவதற்குரிய வழிகள் என வகைப்படுத்தலாம்.
* புத்த தர்மத்தின் வழி, எட்டு வழிப்பாதை பின்வருமாறு வகைப்படுத்தப்படும்.
Ditthi : உண்மைப் பொருளை அடைதல். ஒன்று எப்படிக் காணப்படுகின்றதோ அவ்வாறே அதன் உண்மை வடிவில் நோக்குதல்.
Sankappa: உலகைத் துறத்தல் சுதந்திரம் தீங்கில்லாத மனம் என்பவற்றை அடைய வேண்டுமென்ற குறிக்கோள்.
Vaca: உண்மையையே பேசுவதோடு தீங்கிழைக்காத வகையிலும் பேசுதல்.
Karma : தீங்கில்லாத வகையில் செயற்பாடுகளை அமைத்தல்.
Ajivana: தீங்கு பயக்காத வாழ்க்கையையே வாழுதல்.
Vayayama : முன்னேற்றத்திற்கான முயற்சிகளில் ஈடுபடுதல்.
Sati: தெளிவான உணர்வுடன் படைப்புகளை/ உலகத்தை பார்ப்பதற்கான விழிப்புணர்வைக் கொண்டிருத்தலோடு ஆசைகள், வெறுப்புகள் ஆகியவற்றை விடுத்து ஒன்றை அதன் உண்மை நிலையில் பார்த்தல்.
Samadhi: சரியான தியானமும் மன ஒரு நிலைப்படுத்தலும்.
* ஐந்து கட்டளைகள் விபரிக்கும் புத்த தர்மங்களாவன:
1. அநியாயமாக எந்த உயிரையும் கொல்லாதே. அனைத்து படைப்பினங்களுடனும் அன்பாக நடந்துகொள்.
2. எதையும் திருடாதே எடுப்பதை விட அதிகமாகக் கொடு.
3. பொய் சொல்லாதே நேர்மையாகவும் வெளிப்படையாகவும் நடந்து கொள்.
4. தவறான பாலியல் நடத்தைகளில் ஈடுபடாதே.
5. மது மற்றும் ஏனைய போதைப் பொருள்களை பயன்படுத்தாதே.
மதுபாவனை புத்த தர்மத்திற்கு முற்றிலும் எதிரானது. ஏனெனில் அது மனதை ஒருமிப்பதற்கும் விருத்தி செய்வதற்கும் இடையூறாக அமைவதாலாகும். தியானம், அறிவுடைமை, நீதியுடைமை ஆகியவற்றை வாழ்க்கையில் நடைமுறைப்படுத்துவதன் மூலம் உண்மையான இன்பத்தை உணர்வதற்கான உள்ளகத் திறனைப் பெறமுடியும் என பௌத்தர்கள் நம்ப வேண்டும்.
உடலிற்கு தீங்கு விளைவிக்கும் எந்தவொரு போதைப் பொருளையும் (மதுபானம், சிகரட் மற்றும் ஏனைய போதைப் பொருட்கள்) எந்தளவேனும் உள்ளெடுக்கவே கூடாதென கெளதம புத்தா தன்னைப் பின்பற்றுவோர்களுக்கு கட்டளை இட்டுள்ளார். இப்பொருட்கள் மனிதனின் நிலையான மனோ நிலையைப் பாதிப்பதால் புத்த நம்பிக்கைகளுக்கு எதிரானது. புத்தர்கள் உள்ளத்தை ஒரு பொக்கிசமாகவே கருதுவதோடு மனதைக் கட்டுப்படுத்துவதற்காக தியானங்கள் மூலம் விடாமுயற்சி செய்ய வேண்டும்.
பௌத்தர்கள் ஐந்து கட்டளைகளையும் நற்பண்புகளின் வரையறைகளாகவே பின்பற்றுகின்றனர். அதில் ஒரு கட்டளை மது மற்றும் ஏனைய போதைப்பொருள் உள்ளெடுத்தலை முற்றிலும் விலக்குமாறு எடுத்துரைக்கிறது. இலங்கை போன்ற அதிகளவான பெளத்தர்கள் வாழும் நாடுகளில் கூட சிறிய அளவிலான பெளத்தர்கள் தான் புத்தமதத்தை முழுமையாக பின்பற்றுகிறார்கள். புத்தரது போதனைகளுக்கு எதிர்மாறாக அதிகளவான இலங்கை பெளத்தர்கள் மதுபானத்தை உள்ளெடுக்கிறார்கள்.
தெற்கிலங்கையின் நகர்ப்புறம் ஒன்றில் (மொத்தமாதிரியளவு - 783) நடாத்தப்பட்ட ஆய்வு பின்வருமாறு காட்டுகிறது. 10 வயதிற்கு மேற்பட்டவர்களில் 5% பெண்களும் 52.5% ஆண்களும் மதுபாவனையாளராகவுள்ளனர்.
வயதடிப்படையில் 40 முதல் 50 வயதிற்குட்பட்டவர்களே அதிகளவில் மதுபாவிப்பவர்களாகக் காணப்படுகின்றனர். இனரீதியாகப் பார்க்கும் போது அதிகளவான மதுபாவனை தமிழ் சமூகத்தின் இடையேயும் (43%) அதனைத் தொடர்ந்து சிங்கள சமூகத்தின் இடையேயும் (32% ) காணப்படுகின்றது. ஆனால் முஸ்லிம் சமூகத்தின் இடையே (9%) மிகக் குறைந்தளவிலேயே அறியப்பட்டுள்ளது. (மூலம்: மது பற்றிய உலகளாவிய தகுதியறிக்கை 2004 WHO)
மிதமான அளவில் மதுபானம் அருந்துதல் ஏற்றுக் கொள்ளப்படத்தக்கதென புத்த மதத்தைப் பற்றிய குறைபாடான அறிவுள்ள சிலர் கூறுகின்றனர். எந்த அளவிலேனும் மதுபானம் அருந்துதலை புத்தர் ஒரு போதும் அங்கீகரிக்கவேயில்லை. ஏனெனில் அது மனதின் ஒரு சீர்த்திட நிலையை மிதமான அளவில் கூடப் பாதிக்கிறது.
மன ஒருமைப்பாடானது புத்த தர்மத்தின் மையமாகும். இத்தத்துவம் உடலிலும் மனதிலும் நடைபெறும் மாற்றங்களை நிலையாக பேணுவதில் முக்கியமானது. பலவாறான உணர்வுகள் தோன்றும்போது அதை அறிவுபூர்வமாகக் கையாளுவதற்கு ஒவ்வொரு தனிமனிதனிற்கும் மன ஒருமைப்பாடு முக்கியமானதாகும். ஆனால் மது பாவனையானது மன ஒருமைப்பாட்டை அழிப்பதோடு இக் கொள்கையைப் பேணுவதை இயலாததாக்குகிறது.
மதுபாவனையுடன் முரண்படும் மற்றுமொரு பெளத்த போதனைதான் Karma ஆகும். ஒவ்வொருவரினதும் Karma இற்கு அவரவரே பொறுப்பாளர்களென புத்தர் போதிக்கிறார். ஒருவருடைய செயற்பாடுகள், பேச்சு, எண்ணங்கள் ஆகியவற்றிற்கு அவரே பொறுப்பாளியென Karma கூறுகிறது. மதுபாவனையானது இவ்விடயங்களில் பொறுப்பற்ற தன்மையையே உருவாக்குகிறது. மதுப்பாவனையிலுள்ளவர்கள் எதிர்மறையான Karma வையே உருவாக்குகிறார்கள்.
உலகளாவிய மோகங்களை விட்டு வெளிவருதலே உண்மையான சந்தோசத்தைத் தோற்றுவிக்கத் தக்கதென்பதே புத்த போதனையாகும். ஆனால் மது பாவனையாளர்கள் தமது அனைத்து உணர்வுகளையும் மதுவிடமே ஒப்படைத்துவிடுகிறார்கள். தியானங்களின் மூலமாக இந்த உலகளாவிய மோகங்களை விட்டு வெளிவருதலே புத்த போதனையாகும். பலர் வாழ்க்கையில் வரும் பிரச்சினைகளை மூடி மறைப்பதற்கு மதுவைப் பாவிக்கின்றனர். ஆனால் வாழ்வின் கஷ்டங்களையும் சவால்களையும் எதிர் நோக்குமாறே புத்த மதம் போதிக்கிறது.
வாழ்க்கையைக் கற்றுக்கொள்வதற்கும் தம்மை வளர்த்துக் கொள்வதற்கும் உரிய சந்தர்ப்பங்களாக பிரச்சினைகளைப் பார்க்குமாறு புத்தமதம் வேண்டி நிற்கிறது. தியானங்களினூடாக ஒவ்வொரு தனிமனிதனும் பிரச்சினைகளை எதிர்கொள்வதற்கும் சவால்களை உறுதியாக சமாளிப்பதற்கும் முடியும். ஆனால் மதுவானது ஒரு செயற்கையான உண்மையற்ற சூழ்நிலையையும் சந்தோசத்தையுமே உருவாக்குகிறது. மேலும் மதுபாவனையானது மனதை ஒரு நிலைப்படுத்துவதில் பாரிய பின்னடைவை ஏற்படுத்துகிறது. இது புத்த தர்மத்திற்கு முற்றிலும் எதிரானதாகும்.
இஸ்லாம் மார்க்கமும் மதுபாவனை தொட ர்பில் இதே கொள்கையையே கொண்டிருக்கிறது. இஸ்லாம் மார்க்கத்திலும் ஆரோக்கியத்திற்கும் மனித நன்நடத்தைக்கும் தீங்கு விளைவிக்கும் அனைத்தும் புத்தமதத்தைப் போன்றே தடைசெய்யப்பட்டுள்ளது. ஆகவே இஸ்லாம் மதுபாவனையில் எந்தவொரு விட்டுக் கொ டுப்பும் இல்லாத நிலையைப் பேணுவதோடு சிறியளவு பாவனையைக் கூட முற்றிலும் தடைசெய்துள்ளது. மதுவானது எச்சந்தேகமுமின்றி உடலுக்கும் உள்ளத்திற்கும் பாரிய பாதகங்களை உருவாக்குகிறது. இது உள்ளத்தை மூடிமறைப்பதோடு நோய்களை உருவாக்குதல், பணவீண்விரயம், தனிமனிதர்கள், குடும்பங்கள், சமூகங்கள் என அனைத்து மட்டங்களையும் பாதிக்கிறது. ஆய்வாளர்கள் மதுபாவனைக்கும் சூதாட்டத்திற்குமிடையே உறுதியான தொடர்புகள் உள்ளதாக கூறுகிறார்கள். இது தீர்மானமெடுப்பதைப் பாதித்தல், தீமையிலிருந்து விலகியிருப்பதைத் தடுத்தல் என்பவற்றோடு சூதாட்டம் போன்ற ஒருவரை அழித்து இன்னுமொருவரை வாழவைக்கும் தீய செயல்களில் ஈடுபடுவதைத் தூண்டுகிறது. அல்லாஹ் குர்ஆனில் கூறுகிறான். ''போதைப் பொருட்களும் சூதாட்டங்களும் ஷைத்தானிடமிருந்து வரும் வெறுக்கத்தக்க விடயங்களாகும். மேலும் அவற்றிலிருந்து தவிர்ந்து கொள்ளுமாறும் கட்டளையிடுகிறான். (குர்ஆன் 5:90)"
மதுபாவனையானது புற்றுநோயை ஏற்படுத்துவதில் பிரதான காரணியாகும். இது வாய், தொண்டை, குரல்வளை, களம், ஈரல் மற்றும் மார்பகப்புற்று நோய்க்கான காரணியாகக் காணப்படுகிறது. கர்ப்பகாலத்தில் மதுபாவித்தலால் Fetal alcohol syndrome என்ற நிலைமை ஏற்படுகிறது. இதன்போது குழந்தை நிறை குறைவானதாகக் காணப்படுவதோடு விகாரமடைந்த முகத் தோற்றத்தையும் சிறியளவிலான கண்களையும் எண்ணிக்கையில் குறைந்த கை, கால் விரல்களையும் குறைபாடுள்ள உள்ளுறுப்புகளையும் கொண்டிருக்கும். மேலும் மனவிருத்தி குறைந்ததும் கற்றல் குறைபாடுள்ளதுமான குழந்தைகளைத் தோற்றுவிக்கிறது.
மதுவானது மிகக் கொடிய விளைவுகளை ஏற்படுத்தினாலும் கூட அநேகமான நாடுகளில் அது சட்டரீதியாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது. மேலும் மதுபாவனையானது உலகளாவிய ரீதியில் அதிகரித்துக் கொண்டே செல்கிறது.
விபத்து நேரத்தில் 89% ஆன சாரதிகளும், 28.1% ஆன பாதசாரிகளும் மதுபாவனைக்குட்பட்டவர்களாகக் காணப்படுகின்றனர். இரவு நேரங்களில் நடைபெறும் விபத்துக்களில் 67.4% ஆனவை மதுபாவனையால் ஏற்பட்டவையாகும்.
போக்குவரத்து பொலிஸ் திணைக்களத்தின் தகவல் படி மதுபாவனைக்கு அடிமையாதல், மதுபாவனையால் மன நோய்க்கு உட்படுதல் என்பவற்றினால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1998-- இலிருந்து 1999 இற்குள் 4436 ஆல் அதிகரித்துள்ளது. (மூலம்: மது பற்றிய உலகளாவிய தகுதி அறிக்கை WHO)
மதுபாவனையானது மன ஒருமைப்பாட்டைப் பாதிப்பதோடு பாதகமான நடத்தைகளையும், மோசமான செயற்பாடுகளையும் உருவாக்குகிறது. இது மக்களிடையே பகைமையையும், வெறுப்பையும் உருவாக்குவதோடு கடவுளை நினைவு கூறுவதையும், வணங்குவதையும் விட்டு தூரமாக்குகிறது. மேலும் இது சட்டவிரோதமான பாலியல் நடத்தைகளில் ஈடுபடவும் தூண்டுகிறது. மது பாவனையானது அவமானம், குற்ற உணர்வு போன்றவற்றை உருவாக்குவதோடு அறிவையும் மந்தமாக்குகிறது. இது இரகசியங்கள் மற்றும் தவறுகளை வெளிப்படுத்துவதற்கும் ஏதுவாக அமைகிறது.
நிச்சயமாக ஷைத்தான் நாடுவதெல்லாம் மதுவிலும் சூதாட்டத்திலும் அதன் மூலம் உங்களுக்கிடையில் விரோதத்தையும், வெறுப்பையும் உண்டு பண்ணவும் அல்லாஹ்வை நினைவு கூருவதை விட்டும், தொழுகையை நிறைவேற்றுவதை விட்டும் உங்களை அவன் தடுப்பதையுமேயாகும். ஆகவே, அவைகளிலிருந்து நீங்கள் விலகிக்கொள்கிறீர்களா? (குர்ஆன் 5:91)
விசுவாசங் கொண்டோரே! நிச்சயமாக மது வும், சூதாட்டமும் வணக்கத்திற்காக நடப்பட்டுள்ளவைகளான சிலைகளும், குறிபார்க்கும் சூதாட்ட அம்புகளும் ஆகிய இவையாவும் ஷைத்தானுடைய செயலிலுள்ள அருவருக்கத்தக்கவையாகும். ஆகவே, இவைகளைத் தவிர்த்துக் கொள்ளுங்கள்; அதனால் நீங்கள் வெற்றி பெறுவீர்கள். (குர்ஆன் 5:90)
குர்ஆனானது முழுமனித இனத்திற்கும் அருளப்பெற்ற ஒரு வழிகாட்டியாகும். இது படைப்பினங்களுக்கான படைப்பாளனின் வழிகாட்டல்களைக் கொண்டது. அல்லாஹ் மதுவையும், சூதாட்டத்தையும் இணைவைத்தலுக்கு ஒப்பான செயலாகக் கூறியுள்ளான்.
தெற்கிலங்கையின் நகர்ப்புறம் ஒன்றில் நடத்தப்பட்ட மேற்படி ஆய்வின் முடிவுகளின் படி சிங்களவர்களும், தமிழர்களுமே புத்த தர்மத்தின் முக்கியமான சில அம்சங்களுக்கு (கட்டளைகள், Karman) எதிராகச் செயற்படுகின்றனர். நாங்கள் மதுபானத்தை இலங்கையில் அங்கீகரிப்பதன் மூலமாக மனிதர்களைக் கொல்லமுடியாது. ஏனெனில் புத்த தர்மத்தின் முதலாவது கட்டளையே ‘‘உயிர்களை அநியாயமாகக் கொள்ளாதே’’ என்பதாகும். ஆனால் உயிர்களிலெல்லாம் மிகப் பெறுமதியான உயிர் மனித உயிராகும். மேலே கூறப்பட்ட பலவகையான உடற்குறைபாடுகளுக்கும், நோய்களுக்கும் பிரதான காரணி மதுவாகும். மேலும் இது குடும்பங்களைப் பாழ்படுத்தி சமூகக் கட்டமைப்புகளைச் சிதைத்து நாட்டின் அபிவிருத்தியையும் சீர்குலைக்கின்றது.
முஸ்லிம்களாகிய நாங்கள் ஒரு போதும் மதுபானத்திற்கு ஹலால் சான்றிதழ் வழங்கவில்லை. மிகக் கூடிய முஸ்லிம்கள் (91%) மதுபாவனைக்கு எதிரானவர்களே. நாங்கள் இஸ்லாம், பெளத்தம், இந்து என ஒரு போதும் பிரித்துப் பார்க்க விரும்பவில்லை. சமயங்களுக்கிடையிலான ஒற்றுமையான விடயங்களில் ஒன்றாகச் செயற்படுவதற்கும் வேற்றுமையான விடயங்களில் நேர்மையான சிந்தனையை எடுத்துரைக்கவும் ஒரு போதும் தயங்குவதில்லை. ஏன் நாங்கள் அனைவருமாக சேர்ந்து மதுபாவனையை முற்றிலுமாக எமது தாய்நாட்டிலிருந்து துடைத்தெறிய முடியாது. முஸ்லிம்களாகிய நாங்கள் இலங்கையைப் பற்றிய ஒரு வரலாற்றை எழுதுவதற்கு தயாராக இருக்கிறோம். நாங்கள் மதுபாவனைக்கு ஹராம் சான்றிதழ் வழங்குவதன் மூலமாக
எமது தேசத்திலிருந்து மதுவை முற்றிலுமாக இல்லாதொழித்து இலங்கையை ஆசியாவின் அதிசயமாக மாற்றுவதற்காக பௌத்தர்களை, சிங்களவர்களை அழைக்கிறோம். சிறிய அளவிலும் சரி, பெரிய அளவிலும் சரி மதுபாவனைக்கு அரசு அங்கீகாரம் வழங் குவதற்கு எதிராக நாங்கள் பதாதைகளைத் தூக்குவதானாலும் சரி, சிங்கக் கொடியை தூக்குவதானாலும் சரி என்றும் தயாராக இருக்கிறோம்.
முஸ்லிம்கள் என்றென்றும் சக இன மக்களுடன் ஒற்றுமையாகவும், புரிந்துணர்வுடனும் நடந்து கொள்ளவே விரும்புகின்றனர் என்பதையும் வலியுறுத்த விரும்புகிறோம்.
ஸகி அஹமட்,
மருத்துவ பீடம், யாழ் பல்கலைக்கழகம்
இதனை சிங்களத்தில் மொழி மாற்றம் செய்து சிங்களவர்கள் வாசிக்க செய்யவும்
ReplyDeleteஆம் இன்ஷா அல்லாஹ்,சிங்கள மொழி பெயர்ப்பில் திறமை வாய்ந்தவர்கள் இதனை செய்வார்களாயின் நாம் பிரசுரிக்கத் தயாராக உள்ளோம்.
Delete