ஜனாதிபதியே 13வது திருத்தச் சட்டத்திற்கு எதிராக அமைச்சர்களைத் தூண்டி விடுவது! - சரத் பொன்சேகா கருத்து
அரசமைப்பின் 13வது திருத்தச்சட்டம் மீது அரசு கைவைக்கக்கூடாது என எச்சரிக்கை விடுத்துள்ள ஜனநாயகக் கட்சியின் தலைவரும், முன்னாள் இராணுவத் தளபதியுமான சரத் பொன்சேகா, "13'இற்கு எதிராக அமைச்சர்களைத் தூண்டிவிடுவது ஜனாதிபதியே என்றும் சாடினார்.
வடமாகாண சபைத் தேர்தலில் போட்டியிடுவதற்கு தமது கட்சி முயற்சித்து வருகின்றது என்றும், ஆனால் இறுதி முடிவு இன்னும் எட்டப்படவில்லை என்றும் அவர் கூறினார்.
அரசமைப்பிலிருந்து 13வது திருத்தச் சட்டத்தை ஒழிக்கவேண்டும் என்று அரசில் அங்கம் வகிக்கும் கடும்போக்குடைய பங்காளிக் கட்சிகளும், அரசு சார்பான சிங்கள அமைப்புகளும் தொடர்ச்சியாக வலியுறுத்தி வருவதால் இவ்விவகாரம் நாட்டில் பெரும் சர்ச்சையைக் கிளப்பிவிட்டுள்ளது.
இந்நிலையில் இது தொடர்பாக கருத்து வெளியிடுகையிலேயே பொன்சேகா மேற்கண்டவாறு தெரிவித்தார்.
நாட்டில் தற்போதுள்ள சூழ்நிலைக்கமைய அரசமைப்பின் "13' விடயத்தில் அரசு கைவைக்கக்கூடாது என அவர் தெரிவித்தபோது "தற்போதைய சூழ்நிலை' என நீங்கள் சொல்வது எதனை? அதாவது, எதிர்காலத்தில் 13 ஐ நீக்கலாம் என்ற அர்த்தத்திலா? என ஊடகவியலாளரின் கேள்விக்கு,
தற்போது நிறையப் பிரச்சினைகள் இருக்கின்றன. இவை எதிர்காலத்திலும் தீர்க்கப்படுமா என்ற சந்தேகமுள்ளது என மழுப்பலான போக்கில் அவர் பதிலளித்தார்.
அத்துடன், "13ற்கு எதிராக அமைச்சர்கள் சிலர் வெளியிட்டு வரும் கருத்துகள் தொடர்பில் எழுப்பப்பட்ட கேள்விக்குப் பதிலளித்த சரத் பொன்சேகா, ஜனாதிபதி சொல்லாமல் இந்த அமைச்சர்கள் எதையும் செய்யமாட்டார்கள். எனவே, இதன் பின்புலம் யார் என்பது இதன்மூலம் தெளிவாகின்றது என்றார்.
Post Comment
No comments