Breaking News

முஸ்லிம்களும் ஆயுதம் ஏந்துவார்கள் என்ற பயத்திலே பொதுபல சேனாவை அரசாங்கம் நிறுவியுள்ளது!- எம்.எஸ்.சுபைர்

4-27-2013 7-22-25 AM நாட்டில் முஸ்லிம்களும் ஆயுதம் ஏந்தி போராடுவார்கள் என்ற சந்தேகத்திலே பொதுபல சேனா போன்ற அமுக்கக் குழுக்களை அரசாங்கம் நிறுவியுள்ளது என கிழக்கு மாகாண சபை பிரதி முதல்வர் எம்.எஸ்.சுபைர் தெரிவித்தார்.

பல்கலைக்கழகத்திற்கு தெரிவு செய்யப்பட்ட மாணவர்களை கௌரவிக்கும் வைபவம் மட்.ஏறாவூர் அறபா வித்தியாலயத்தில் நடைபெற்ற நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றுகையில் அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் தொடர்ந்தும் உரையாற்றுகையில்,

அரசாங்கத்துடன் முஸ்லிம் சமூகம் அன்னியொன்னியத்துடன் இருந்து வருகின்ற இந்த நிலை, அரசாங்கம் முஸ்லிம் சமூகத்தின் மீது கொண்டுள்ள இந்த சந்தேகம் மிக ஆபத்தானதாகும். இதனால் இந்த நாட்டில் இன முறுகல் ஏற்படக்கூடிய நிலைமைகள் காணப்படுகின்றன.

இந்த முஸ்லிம் சமூகத்தின் மீது இவ்வாறான சந்தேகங்கள் ஏற்பட்டால் அரசாங்கம் நேரடியாக முஸ்லிம் சமூகத் தலைவர்கள் மற்றும் உலமாக்களிடம் கேட்டு சந்தேகங்களை நிவர்த்தி செய்து கொள்ளலாம்.

அரசாங்கத்திற்கு ஏற்பட்ட இவ்வாறான சந்தேகங்களுக்கு முஸ்லிம் தலைவர்கள், உலமாக்கள் தெளிவான பதில்களை கொடுக்க வேண்டும். அவ்வாறு தெளிவுபடுத்துவதனால் அரசின் சந்தேகங்கள் உடனுக்குடன் திருத்திக் கொள்ள முடியும்.

இந்த நாட்டில் முஸ்லிம்கள் சம்மந்தமாக எழுகின்ற சந்தேகங்களுக்கு முஸ்லிம் சமூகம் அதற்கான பதில்களை வழங்க பின் நிற்கக்கூடாது என குறிப்பிட்டுள்ளார்.

No comments