ஹஜ் காலத்தில் குழப்பத்துக்கு தூபமிடும் தீக்குளிப்புச் சம்பவம்; அமைச்சர் ஹக்கீம் முன்னெச்சரிக்கை
கண்டியில் அண்மையில் நடைபெற்ற பிக்கு தீக்குளிப்புச் சம்பவத்தால் புனித நோன்பு, ஹஜ் பெருநாள் கடமைகளில் தாக்கங்கள் ஏற்பட்டுவிடக்கூடாது. அதில் அரசு அக்கறை செலுத்த வேண்டும்.
ஒவ்வொரு முறையும் ஹஜ் காலத்தில்தான் குழப்பங்களை ஏற்படுத்தும் வகையில் இவ்வாறான துரதிஸ்ட சம்பவங்கள் நடைபெற்று வருகின்றன.
இவ்வாறு நீதியமைச்சரும் மு.கா. தலைவருமான ரவூப் ஹக்கீம் தெரிவித்தார். பௌத்த மேலாதிக்கவாதிகளின் அண்மைக்கால செயற்பாடுகள் மீண்டும் தலைதூக்கியிருப்பதன் பின்னணி குறித்து அரசு கூடுதல் கவனம் செலுத்தவேண்டிய தேவை இருக்கிறது என்று அவர் சுட்டிக்காட்டினார்.
கண்டியில் பிக்கு ஒருவர் தீக்குளித்த சம்பவத்தையடுத்து பௌத்த பிக்குகள் ஒருசிலரால், முஸ்லிம் பிரதேசங்கள் பலவற்றிலுள்ள இறைச்சிக்கடைகளுக்கு விடுக்கப்படும் அச்சுறுத்தல்கள் குறித்து அவர் கருத்துத் தெரிவித்தபோதே இவ்வாறு கூறினார்.
இதுகுறித்து அவர் தெரிவித்ததாவது:
அரசை நெருக்கடிக்குள் தள்ளுவதற்காக இப்போது எடுக்கப்படும் பல முயற்சிகளில் ஒன்றாகத்தான் கண்டியில் நடைபெற்ற சம்பவத்தைப் பார்க்கவேண்டியுள்ளது.
ஒவ்வொரு முறையும் ஹஜ் காலத்தில் இவ்வாறான பிரச்சினைகள் வந்தவண்ணம் உள் ளன.எனினும் நாங்கள் மிகவும் நிதானமாக இந்த விடயங்களைக் கையாளவேண்டியுள்ளது.
ஹஜ் பெருநாள் காலத்தில் முஸ்லிம்கள் உழ்ஹிய்யா கொடுப்பது தொடர்பில் நாங்கள் கவனத்தைச் செலுத்தியுள்ளோம். அதில் எதுவித பாதிப்புகளும் ஏற்படாத வகையில் நடவடிக்கைகளை எடுக்க வேண்டியுள்ளது. இதுகுறித்து உயர்மட்டத் தரப்புகளின் கவனத்துக்கு கொண்டு செல்கிறோம் என்றார்.
Post Comment
No comments