Breaking News

டயஸ்போறாக்களுடன் பேச்சுவார்த்தை நடாத்திய பொதுபல சேனாவை ஏன் இன்னும் விசாரணை செய்யவில்லை?

mus-y.l.s.hameedஇலங்கை அரசாங்கத்திற்கு எதிரான டயஸ்போறாக்களுடன் சென்று பேச்சுவார்த்தை நடாத்திய பொதுபல சேனாவை ஏன் இரகசியப் பொலிஸார் இன்னும் விசாரணை செய்ய வில்லை என கேள்வி எழுப்புகிறார் அகில இலங்கை முஸ்லிம் காங்கிரஸின் செயலாளர் நாயகம் வை.எல்.எஸ்.ஹமீட்.

பொது பல சேனாவின் செயற்பாடுகளை கண்டித்து வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

“பொதுபல சேனாவிற்கு தமிழ் மக்கள் மீது திடீர் அன்பு பிறந்திருக்கின்றது. சோழியன் குடும்பி சும்மா ஆடாது என்பார்கள். பௌத்தத்தையும் பௌத்த மக்களையும் பாதுகாக்க அமெரிக்காவுற்குப் போய் தமிழ் டயஸ் போறாக்களுடன் பேசி விட்டு வந்திருக்கின்றார்கள்.

 

முஸ்லிம்கள் மீது பாகம் இரண்டு அநியாயங்களை அரங்கேற்ற எத்தனிக்கும் பொதுபல சேனா!

முஸ்லிம்கள் மீது தமது பாகம் இரண்டு அநியாயங்களை செய்ய எத்தனிக்கும் பொதுபல சேனா அமொரிக்காவில் ஒரு மாதம் ஓய்வெடுத்து விட்டு மீண்டும் முஸ்லிம்களுக்கு எதிரான அதன் பாகம் இரண்டை ஆரம்பித்தது போல் தெரிகின்றது.

ஆனால் பாகம் ஒன்றின்போது இருந்த விறுவிறுப்பு பாகம் இரண்டின் போது நிச்சயமாக இருக்க மாட்டாது. ஏனெனில், பெரும்பான்மை சிங்கள மக்கள் பொதுபல சேனாவின் சரியான நிறத்தை அடையாளம் கண்டு விட்டார்கள். பொய்யையும் குரோதத்தையும் முதலீடாகக் கொண்ட எந்த வியாபாரமும் இலாபமடையாது.

அமெரிக்காவில் அவர்கள் தங்கியிருந்த விகாரையிலிருந்து துரத்தப்பட்ட செய்தி இலங்கை மக்களுக்கு ஏற்கனவே தெரிந்து விட்டது என்பது இவர்களுக்கு இன்னும் தெரியாது போலும்,

அதனால்தான் அவர்களுக்கு அங்கு பலத்த வரவேற்பு கிடைத்ததாக கூறுகிறார்கள். எல்லாவற்றையும் தலைகீழாக மாற்றிக் கூறுகின்ற வழக்கமுடைய பொது பல சேனா சில வேளை அவ்வாறு துரத்தப்பட்டதைத்தான் வரவேற்பு என்கிறார்களோ தெரியவில்லை.

இலங்கைக்கு எதிராக ஜெனீவாவில் கொண்டு வரப்பட்ட பிரேரணையின் பின்னால் முழு மூச்சாக செயற்பட்டவர்கள் இந்த டயஸ்போறாக்கள்தான் என்று கடந்த காலங்களில் குற்றம் சுமத்தப்பட்டது. அவ்வாறென்றால், அந்த டயஸ்போறாக்களுடன் சென்று பேச்சுவார்த்தை நடாத்திய பொதுபல சேனாவை ஏன் இரகசியப் பொலிஸார் இன்னும் விசாரணை செய்யவில்லை.

பொதுபல சேனாக்காரர்களுக்கு அற்புத கண்டுபிடிப்புக்கள் செய்த விஞ்ஞானிகளுக்கு வழங்குகின்ற நோபல் பரிசினை வழங்குவது பொருத்தமாகும். ஏனென்றால் பொதுபல சேனா பாகம் ஒன்றில் மறைந்த தலைவர் அஷ்ரப் நாட்டிற்கு கொண்டு வந்த ஆயுதக் கொள்கலன்கள், முஸ்லிம்கள் ஏனைய சமயத்தவர்களுக்கு வழங்குகின்ற உணவில் மூன்று முறை துப்பிவிட்டு வழங்குவது போன்ற பல அற்புத கண்டுபிடிப்புக்களை செய்திருந்தனர்.

டயஸ்போறாரக்களுடன் என்ன பேசினார்கள்?

இப்பொழுது பாகம் இரண்டின் அவர்களது புதிய கண்டுபிடிப்புத்தான் அமைச்சர் விமல் வீரவங்சவிற்கும் இந்தியாவின் சிவசேனாவிற்கும் இடையேயுள்ள தொடர்பும் அமைச்சர் விமல் வீரவங்ம்ச பௌத்தத்தை அழிக்க செயற்படுகின்றார் என்பதுமாகும். இவர்கள் இன்னும் எத்தனை கண்டு பிடிப்புக்களை செய்ய இருக்கின்றார்களோ தெரியவில்லை.

எனவே இவர்கள் நிச்சயமாக நோபல் பரிசு பெறுவதற்கு தகுதியானவர்கள். சிலவேளை இம்முறை வேறு எவருக்கும் நோபல் பரிசுகளை வழங்காது சகலவற்றையும் இவர்களுக்கே வழங்கினால் சாலப் பொருத்தமாக இருக்கும்.

ஏனெனில் உலக வரலாற்றில் இதுவரை இவர்கள் போன்று கண்டு பிடிப்புக்களைச் செய்தவர்கள் இல்லை. சிலவேளை அணுவைக் கண்டுபிடித்த டோல்டன், புவியீர்ப்பு சக்தியைக் கண்டுபிடித்த நியூட்டன், மின் குமிழைக் கண்டு பிடித்த எடிசன் போன்றவர்கள் உயிருடன் இருந்தால், தாம்பெரிய விஞ்ஞானிகளாக இருந்தும் பொதுபல சேனாவைப் போன்று அற்புதமான கண்டுபிடிப்புக்களைச் செய்ய முடியவில்லையே என்று அவர்கள் வெட்கித் தலைகுனிந்திருப்பார்கள்.

அவர்களின் கண்டு பிடிப்பான முஸ்லிம் அடிப்படை வாதத்தையும், அல்-கொய்தா, தலிபான் போன்ற பயங்கரவாத அமைப்புக்கள் இலங்கையில் இயங்குகின்றன என்பதையும் பாராளுமன்றில் விவாதிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்திருக்கின்றார்கள். ஆனால் அதற்கு முன் அமெரிக்காவிற்குச் சென்று டயஸ்போறாரக்களுடன் என்ன பேசினார்கள்.

அடுத்த ஜெனீவா கூட்டத் தொடரில் எப்படிப்பட்ட பிரேரணை கொண்டு வர வேண்டும் என்பது தொடர்பாகவா கலந்துரையாடினார்கள்? போன்ற விடயங்களைப் பற்றி பாராளுமன்றத்தில் விவாதிப்பது சிறந்ததாக இருக்கும்.

ஆனால் பாராளுமன்றில் பொது பல சேனாவிற்கு எதிராக விவாதம் நடத்துகின்ற போது பொதுபல சேனாவின் பேச்சாளர்களாக பாராளுமன்றில் யார் செயற்படுவார்கள் என்பதை சொன்னால் பொதுபல சேனாவின் உள்ளுர் சாரதிகள் யார் என்பதை இலகுவாக மக்கள் அடையாளம் கண்டு கொள்வார்கள்.

பராளுமன்றத் தேர்தலில் குதிப்பதற்கான வியூகம்!

அடுத்த பராளுமன்றத் தேர்தலில் குதிப்பதற்கான ஒரு வியூகம் தான் பாராளுமன்றில் விவாதத்தைக் கோருவது என்பதை புரிந்து கொள்ள முடியாத முட்டாள்கள் அல்ல இந்த நாட்டு மக்கள்.

ஏனெனில் பாராளுமன்றில் இல்லாதவர்கள் பாராளுமன்றில் விவாதம் கோரி அதற்கு நாம்பாராளுமன்றத்தில் இல்லாததனால் தான் அவ்விவாதம் நடக்கவில்லை. அல்லது அவ்வாறு விவாதம் நடந்தால் நமது பேச்சாளர்கள் விடயங்களை சரியாக முன்வைக்க வில்லை.

எனவேதான் எம்மை பௌத்தத்தைப் பாதுகாக்க பாராளுமன்றம் அனுப்புங்கள் என்று கோருவதற்கான முன்னெடுப்புத்தான் இந்த பாராளுமன்ற விவாதக் கோரிக்கையாகும்.

நாம் தேர்தலில் குதிக்க மாட்டோம் என்று பொது பல சேனாவின் அறிவிப்பு நாம் தேர்தலில் போட்டியிடுவோம் என்று மறைமுகமாகச் சொல்வதாகும். ஏனெனில், இந்த அரசியலுக்கு வருகின்ற புதுமுக வரவுகள் ஆரம்பத்தில் அரசியலில் ஆர்வமில்லை, அரசியலுக்கு வரும் நோக்கமில்லை என்று சொன்ன வரலாறுகள் ஏராளம்.

ஆனால் பொதுபல சேனா அரசியலுக்கு வந்தாலும், வராவிட்டாலும் அதைப்பற்றி எங்களுக்குக் கவலையில்லை. அவர்கள் யாருடைய தரகராக செயற்பட்டாலும் சரி அது எங்களுடைய பிரச்சினை அல்ல. ஆனால் அவர்களுடைய குருகிய இனவாத இலக்கை முஸ்லிம்களின் தோள்களின் மீது சவாரி செய்து அடைய முற்படுவதை தொடந்தும் எம்மால் ஜீரணிக்க முடியாது.

ஒரு சமூகம் சிறுபான்மை என்பதற்காக அச்சமூகம் கிள்ளுக்கீரையாக பயன்படுத்தப்படுவதை அனுமதிக்க முடியாது.

எனவே, இந்த பொதுபல சேனா தனது சித்து விளையாட்டின் பாகம் இரண்டை உடனடியாக நிறத்த வேண்டும் அல்லது அரசாங்கம் அதற்குரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று வேண்டுகிறோம்

No comments