தீக்குளிப்பு அரசியலால் சீண்ட முனையும் புதிய தந்திரம்
இலங்கை முஸ்லிம்களுக்கு எதிராக அண்மைக்காலமாக மேற்கிளம்பிய பௌத்த கடும்போக்காளர்களின் அச்சுறுத்தல்கள் ஓரளவு தணிந்துவிட்டதாகவே நாம் நம்பியிருந்தோம். ஆனாலும் கடந்த வெள்ளிக்கிழமை வெசாக் தினத்தில் பௌத்த பிக்கு ஒருவர் தீக்குளித்த சம்பவமும் அதனைத் தொடர்ந்துள்ள நாட்டு நிலைமைகளும் நமது நம்பிக்கைகளை கேள்விக்குட்படுத்துவதாகவே அமைந்துள்ளன.
முஸ்லிம்களுக்கு எதிரான தமது போராட்டத்தில் கற்களையும் சொற்களையுமே ஆயுதமாக எடுத்த பௌத்த பிக்குகள் இன்று நெருப்பு மூட்டி தற்கொலை செய்து கொள்ளுமளவுக்கு மாற்றம் கண்டிருக்கிறார்கள். குறித்த தேரர் தானாகவே தீ மூட்டிக் கொண்டாரா அல்லது அவருக்கு யாரேனும் தீ மூட்டிவிட்டார்களா எனும் கேள்விக்கு இதுவரை உறுதியான பதில் கிடைக்காவிடினும் இந்த நிகழ்வு மிகவும் பாரதூரமானது என்பதில் சந்தேகமில்லை.
இலங்கையில் மாடுகள் அறுக்கப்படுவதை தடை செய்ய வேண்டும் என குறித்த தேரர் பல வருடங்களாக போராடி வருபவர் எனத் தெரிவிக்கப்படுகிறது. அத்துடன் இவர் ஓர் அரசியல்வாதி எனவும் முஸ்லிம்களுக்கு எதிரான அண்மைக்கால செயற்பாடுகளில் முன்னின்றவர் எனவும் தற்போது ஊடகங்கள் செய்திகளை வெளியிட ஆரம்பித்துள்ளன.
தீக்குளிப்பு அரசியல் என்பது இலங்கையைப் பொறுத்தவரையில் புதியது என்றுதான் சொல்ல வேண்டும். ஆனால் தமிழகத்திற்கு இது புதியதல்ல. இலங்கைத் தமிழ் மக்களின் பிரச்சினைகளை வைத்து தமக்கு அரசியல் ஆதாயம் தேடும் தமிழ் நாட்டு அரசியல்வாதிகள் பல இளைஞர்களின் உயிர்களை இப்படி தீக்கு இரையாக்கியிருக்கிறார்கள். அவ்வாறானதொரு துரதிஷ்டவசமான அரசியல் கலாசாரம் இலங்கையிலும் புகுந்துவிட்டதோ என்பதே இன்று நம்முன் எழுந்துள்ள அச்சமாகும்.
பொதுக் கூட்டம் நடத்தியோ ஊடகவியலாளர் மாநாடுகளை நடத்தியோ துண்டுப் பிரசுரங்களை விநியோகித்தோ பெரும்பான்மை சிங்கள மக்களை தம் பக்கம் ஈர்க்க முடியாது. இவ்வாறான தீக்குளிப்புகளை மேற்கொண்டு சில பிக்குகளை பலி கொடுத்தால்தான் தமது இனவாத மதவாத அரசியல் மக்கள் மத்தியில் எடுபடும் என இந்த சக்திகள் இப்போது சிந்திக்கத் தொடங்கியிருக்கின்றன. அதன் முதற்கட்ட வெளிப்பாடாகவும் நாம் இந்த தீக்குளிப்பை பார்க்க முடியும்.
இந்த இடத்தில்தான் முஸ்லிம்கள் மிகக் கவனமாக நடந்து கொள்ள வேண்டியது அவசியமாகும். சிங்கள மக்களின் உணர்ச்சிகளைத் தூண்டி அரசியல் செய்வதையே தமது பிரதான நிகழ்ச்சி நிரலாகக் கொண்டுள்ள இவர்கள் அதற்காக எவ்வாறான விலைகளைக் கொடுக்கவும் முன்வரக் கூடும். அதற்கு ஒருபோதும் முஸ்லிம்கள் பலிக்கடாவாகிவிடக் கூடாது.
கடந்த ஆறு மாதங்களாக மிகக் கொந்தளிப்பான சூழல் நிலவிய போதிலும் முஸ்லிம்கள் தரப்பிலிருந்து ஒரு கல் கூட சிங்கள மக்களை நோக்கி வீசப்பட்டிருக்கவில்லை. இந்த அமைதியும் நிதானமும்தான் அவர்களை தோல்வியடையச் செய்தது. அதனால்தான் முஸ்லிம்களை மேலும் சீண்டிப் பார்க்க சிங்கள மக்கள் நேசிக்கும் பௌத்த தேரர்களின் உயிர்களைப் பலிகொடுக்க முயற்சிக்கிறார்கள். இது விடயத்தில் நாம் மிகத் தெளிவாக இருக்க வேண்டியது அவசியமாகும்.
தீக்குளிப்பின் விளைவாக சில இறைச்சிக் கடைகள் தாக்கப்பட்டிருக்கின்றன. மேலும் தாக்கப்படக் கூடும். இன்றேல் வேறு விதமான எதிர்ப்புகள் முன்வைக்கப்படக் கூடும். அவ்வாறான சமயங்களில் முஸ்லிம்கள் தரப்பில் நிதானம் தவறாது செயற்படுவதை உறுதிப்படுத்த வேண்டியது அவசியமாகும்.
ஏலவே சிவில் சமூகத் தலைமைகள் இதுவிடயத்தில் எவ்வாறு ஒற்றுமையாகவும் விவேகமாகவும் நடந்து கொண்டார்களோ அதேபோன்று இந்த காலகட்டங்களிலும் செயற்படுவார்கள் என எதிர்பார்க்கிறோம். மக்களும் அவர்களுக்குத் தேவையான ஒத்துழைப்புகளை வழங்க வேண்டியது அவசியமும் காலத்தின் கட்டாயத் தேவையுமாகும்.
நன்றி : விடிவெள்ளி
Post Comment
No comments