இனவாதம் இன்னும் கைவிடப்பட வில்லை!
'முஸ்லிம்களுக்கு எதிரான இனவாத நடவடிக்கைகளின் ஆரவாரங்கள் குறைந்திருக்கின்ற போதிலும் அவற்றின் இலக்குகள் கைவிடப்படவில்லை என்பது தெரிகிறது. இத்தனை காலமும் ஆரவாரமாகவும், ஆர்ப்பாட்டமாகவும் வெளிப்படையாகவும் மேற் கொள்ளப்பட்டு வந்த இனவாத நடவடிக்கைகளை இப்போது மறை முகமாகவும், ஆரவாரமில்லாமலும் செய்கின்ற வழிமுறையை இனவாத சக்திகள் கடைப்பிடிக்கத் தொடங்கியிருக்கிறார்களோ? என்ற சந்தேகம் எமக்கு ஏற்படுகின்றது.'
இவ்வாறு கடந்த 26.04.2013 அன்று கட்டாரில் 'இலங்கை முஸ்லிம்களும் சமகால நிலவரங்களும்' என்ற தலைப்பில் நடைபெற்ற ஒன்று கூடலில் நல்லாட்சிக்கான மக்கள் இயக்கத்தின் சூறாசபை உறுப்பினர் பொறியியலாளர் அப்துர் ரஹ்மான் தெரிவித்தார்.
கட்டாரிலுள்ள சிறீலங்கா முஸ்லிம் மஜ்லிஸ் எற்பாட்டில் நடைபெற்ற இந்நிகழ்வில் சிறீலங்கா முஸ்லிம் கவுன்சில் தலைவர் என்.எம் அமீன் , கலாநிதி அஷ்ஷெய்க் இனாமுல்லா ஆகியோரும் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினர்.
பொறியியலார் அப்துர் ரஹ்மான் தனதுரையில் மேலும் தெரிவித்ததாவது,
இலங்கையின் வரலாற்றில் முன் எப்போதும் இல்லாத வகையில் முஸ்லிம்களுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்டுவந்த இனவாதப் பிரச்சாரங்களும் அச்சுறுத்தல்களும் தற்போது சற்று தணிந்திருப்பது போல் தெரிந்தாலும் நாம் இது பற்றி அலட்டிக் கொள்ளாமல் இருந்துவிட முடியாது. கடந்த ஐந்து மாதங்களாக முஸ்லிம்களுக்கு எதிராக மேற் கொள்ளப்பட்ட இனவாத நடவடிக்கைகள் பல்வேறு வகையான பாதிப்புகளையும், மனஉழைச்சல்களையும் முஸ்லிம்களுக்கு ஏற்படுத்தி இருந்தன. இந்தப் பிரச்சினைகளுக்கு மத்தியிலும் கூட சாதகமான சில விழைவுகளும் ஏற்பட்டிருப்பதனை இங்கு நாம் கவனிக்க வேண்டும்.
பேரின சமூகத்தைச் சேர்ந்த மனித உரிமை செயற்பாட்டாளரும், ஆய்வாளருமான ஒருவருடன் நான் பேசிக் கொண்டிருந்த போது அவர் ஒரு விடயத்தை சுட்டிக் காட்டினார். அதாவது 'முஸ்லிம் சமூகத்திற்குள்ளால் ஊடுருவி இருப்பதாக இது வரை காலமும் குற்றம் சாட்டப்பட்டு வந்த தீவிரவாத மதவாத சக்திகள் உண்மையிலேயே காணப்படுகின்றனவா..? என்பதனை முஸ்லிம்களைச் சீண்டிப் பார்ப்பதன் மூலம் பரீட்சித்துப் பார்ப்பதற்காக அரசாங்கம் இந்த இனவாத நடவடிக்கைகளை ஒரு வகையில் பயன்படுத்திக் கொண்டிருக்கிறது. அவ்வாறு எதுவும் முஸ்லிம் சமூகத்திற்குள் இல்லை என்பது இப்போது நிரூபிக்கப்பட்டிருக்கிறது' என்பதனை அவர் எனக்கு சுட்டிக்காட்டினார். இது யதார்த்தமான ஒன்றேயாகும். ஏனெனில் யுத்தம் முடிவடைந்த காலந் தொடக்கம் முஸ்லிம் சமூகத்திற்குள் ஜிஹாத் என்றும் ஏனைய அமைப்புக்கள் என்றும் தீவிரவாத சக்திகள் இருப்பதாக அநியாயமாக குற்றம் சாட்டி வந்தவர்கள் இப்போது பகிரங்கமாக அவ்வாறு எதுவும் இல்லை என்பதனை ஒப்புக் கொள்ளத் தொடங்கியிருக்கிறார்கள்.
அண்மையில் பாதுகாப்பு தரப்பினால் வெளியிடப்பட்ட அறிக்கைகளும் இதனைத்தான் சொல்கின்றன. அந்த வகையில் நாம் சந்தோசப்படமுடியும்.
இப்பிரச்சினைகளுக்கு மத்தியில் ஏற்பட்ட மற்றுமொரு சாதகமான அம்சம் என்னவென்றால்..... முஸ்லிம் சமூகம் இவ்வாறான பிரச்சினைகளை எதிர் கொள்வதில் எவ்வளவு தூரம் முதிர்ச்சியையும், நிதானத்தையும், விட்டுக் கொடுப்பினையும் சகிப்புத் தன்மையையும் கடைப்பிடித்திருக்கிறது என்பது இங்கு நிருபிக்கப்பட்டிருக்கிறது. முஸ்லிம் சமூகத்தின் இந்த பொறுப்புமிக்க கையாளுதல் நடவடிக்கைகள் எல்லோராலும் பாராட்டப்பட்டிருப்பதோடு, அந்நிய சமூகத்தவர்களைக் கவர்ந்தும் இருக்கிறது.
நமக்கெதிரான இந்த இனவாத நடவடிக்கைகள் ஏற்படுத்திய இன்னுமொரு சாதகமான அம்சம்தான் முஸ்லிம் சமூகம் தன்னை நோக்கி சுயவிசாரணை செய்கின்ற, தூரதிருஸ்டியோடு சிந்திக்கின்ற ஒரு வாய்ப்பும் விழிப்புணர்ச்சியும் சமூகத்தில் ஏற்படுத்தப்பட்டிருக்கிறது. நாம் விட்ட தவறுகள் என்ன..? நமக்குள் இருக்கின்ற பலவீனங்களுக்கான காரணங்கள் என்ன..? சிறுபாண்மை சமூகமாக இந்த நாட்டிலே வாழுகின்ற நாங்கள் எவ்வாறு எங்களை ஒழுங்கு படுத்திக் கொள்ள வேண்டும் என்ற பல விழிப்புணர்வுக் கேள்விகளை இப்போது எல்லோரும் கேட்கத் தொடங்கியிருக்கிறார்கள். மாத்திரமின்றி சில்லறைக் காரணங்களுக்காக தமக்குள் பிழவு பட்டிருக்கின்ற நிலைமைகளை மாற்றி ஒற்றுமைப்பட்ட சமூக கட்டமைப்பாக நாம் மீளெழுந்து வரவேண்டும் என்பதில் அத்தனை பேருமே குறியாக இருக்கிறார்கள். இதுவும் நாம் சந்தோசப்பட வேண்டிய விடயமே..!
இருந்தாலும் இங்கு கேட்கப்படவேண்டிய அடிப்படைக் கேள்வியொன்று இருக்கிறது. நமது அடிப்படை உரிமைகளையும், நமது மத கலாசார விழுமியங்களையும் நமக்காக அரசாங்கம் செய்ய வேண்டிய கடமைகளையும் விட்டுக் கொடுத்துத்தான் நமது நிதானத்தையும் நமது சகிப்புத் தன்மையையும் நிரூபிக்க வேண்டிய தேவை இருக்கிறதா..? என்பதுவே அந்தக் கேள்வியாகும்
முஸ்லிம்களுக்கு எதிராக எழுப்பப்பட்ட பிரச்சினைகள் தணிந்து விட்டதாக தோன்றினாலும் அவைகள் முறையாக அரசாங்கத்தினால் தீர்க்கப்படவில்லை என்பது மட்டும் தெளிவாகத் தெரிகிறது. உதாரணமாக ஹலால் சான்றிதழ் மூலம் கிடைக்கும் ஏற்றுமதி அனுகூலத்தை தொடர்ந்தும் பயன்படுத்திக் கொள்ள விரும்புகின்ற அரசாங்கம் ஹலால் சான்றிதழ் வழங்கும் நடைமுறையினை ஒரு கட்டமைப்பின் கீழ் சட்டபூர்வமாக்குவது பற்றி இன்னமும் இழுத்தடிப்பே செய்து வருகின்றது.
தம்புள்ளை பள்ளி விவகாரம் மற்றுமொரு உதாரணமாகும். கடந்த ஒரு வருடத்திற்கு முன்னர் எழுப்பப்பட்ட இந்தப் பிரச்சினை சமூகமாகத் தீர்க்கப்படும், முஸ்லிம்களுக்கு நியாயம் வழங்கப்படும், பள்ளிவாயல் அகற்றப்படமாட்டாது என்ற பல வாக்குறுதிகளை அரசாங்கமும் அரசாங்க சார்பு அரசியல்வாதிகளும் அள்ளி வழங்கினர். இருப்பினும் இப்பள்ளிவாயலைச் சூழவுள்ள அத்தனை கட்டடங்களும் நகர அபிவிருத்தி என்ற பெயரிலும் புனித பூமி அபிவிருத்தி என்ற பெயரிலும் தற்போது அகற்றப்பட்டிருக்கின்றன. பள்ளிவாயலை ஊடறுத்துச் செல்லுகின்ற வகையில் போக்குவரத்து வீதி யொன்றும் அமைக்க திட்டமிட்டிருப்பதாக தெரிய வருகிறது. ஆக மொத்தத்தில் அங்கிருக்கும் பள்ளிவாயலை அகற்றுவதற்கான அத்தனை கைங்கரியங்களும் இப்போது அமைதியாக நடை பெற்றுக் கொண்டிருக்கின்றன என்பது தெளிவாகின்றது.
இந்த வகையில் பார்க்கின்ற போது முஸ்லிம்களுக்கு எதிரான இனவாத நடவடிக்கைகளின் ஆரவாரங்கள் குறைந்திருக்கின்ற போதிலும் அவற்றின் இலக்குகள் கைவிடப்படவில்லை என்பது தெரிகிறது. இத்தனை காலமும் ஆரவாரமாகவும், ஆர்ப்பாட்டமாகவும் வெளிப்படையாகவும் மேற்கொள்ளப்பட்டு வந்த இனவாத நடவடிக்கைகளை இப்போது மறை முகமாகவும் ஆரவாரமில்லாமலும் செய்கின்ற வழிமுறையை இனவாத சக்திகள் கடைப்பிடிக்கத் தொடங்கியிருக்கிறார்களோ? என்ற சந்தேகம் எமக்கு ஏற்படுகின்றது.
எனவே, முஸ்லிம் சமூகம் எல்லாம் முடிந்து விட்டது என்கின்ற அர்த்தமற்ற நம்பிக்கையில் இருந்துவிடக் கூடாது. இந்தப் பிரச்சினைகள் நமக்கு ஏற்படுத்திய விழிப்புணர்ச்சியினையும், கண்திறப்பினையும் நாம் பயன்படுத்தி நம்மை ஒழுங்கு படுத்திக் கொள்ள முன்வர வேண்டும்.
கடந்த ஐந்து மாத காலமாக நமக்கெதிரான இனவாத நடவடிக்கைகள் உக்கிரமடைந்திருந்த வேளையில் எவ்வளவு தூரம் நமது சமூகம் பலவீனமாக இருக்கிறது என்பதை நாம் புரிந்து கொண்டோம்.
ஏனைய சகோதர சமூகங்கள் தம்மகத்தே எவ்வாறான பலமான கட்டமைப்புக்களை கொண்டிருக்கின்றன என்பதனை எமது சமூகத்தோடு ஒப்பிட்டுப் பார்க்கின்ற போது நாம் புரிந்து கௌ;ள முடியும்.
அடுத்த சமூகங்களைப் பொறுத்த வரையில் அவர்களுக்கென்று பலமான ஊடக கட்;டமைப்பு இருக்கிறது. அவர்களுக்கென்று குரல் கொடுக்கக்கூடிய பலமான புத்தி ஜீவிகளின் சமூகம் இருக்கிறது. நாட்டில் இருக்கின்ற சட்ட ரீதியான பாதுகாப்புகளை பயன்படுத்திக் கொள்கின்ற ஏற்பாடுகளும், அவர்களிடம் பலமாக இருக்கிறது. பொதுமக்களின் விழிப்புணர்வு அங்கு உயர்வாக இருக்கிறது. சிவில் சமூக கட்டமைப்புகள் அவர்களின் சமூகத்திற்காக பலமாக குரல் கொடுக்கின்றன. வெளிநாட்டில் புலம் பெயர்ந்து வாழ்கின்ற மக்கள் தமது சமூகத்திற்காக அக்கறையுடன் உழகைகின்றார்கள். சர்வதேச சமூகத்தில் அவர்களது பிரச்சினைகள் அங்கீகரிக்கப்பட்டது மட்டுமல்லாமல் அவர்களது பிரச்சினைகளை சர்வதேச சமூகம் முன்னின்று பேசுகிறது. எல்லாவற்றுக்கும் மேலாக அவர்களது அரசியல் களம் கட்டுக் கோப்பாகவும் ஒற்றுமையாகவும் இருக்கிறது. தமது சமூகத்திற்காக பேசவேண்டிய விடயங்களை அது பேசுகிறது. சமூகத்தின் நலன்களுக்காக தமது அரசியல் பலத்தினை முழுமையாக அவர்கள் பிரயோகிக்கின்றார்கள்.
ஆனால் இந்த அம்சங்களை முஸ்லிம் சமூகத்தோடு ஒப்பிட்டுப் பார்க்கின்றபோது ஒரு விடயத்தைத்தவிர ஏனைய அத்தனை விடயங்களிலும் நாம் பலவீனமாக இருப்பதனை இங்கு கண்டு கொள்ள முடியும்.
சிவில் சமூக தலைமைத்துவ விடயத்தில் மாத்திரம்தான் நாம் ஓரளவு திருப்திப்பட முடியும். ஏனைய அத்தனை விடயங்களிலும் நாம் பலவீனமாக இருக்கிறோம். கடந்த ஐந்து மாதகால பிரச்சினைகளின் போது நமது ஜம்இயத்துல் உலமாவும், சிறீலங்கா முஸ்லிம் கவுன்சிலும் சேர்ந்து தான் இந்தப் பிரச்சினைகளை முன்னின்று அத்தனை சவால்களுக்கும் முகம் கொடுத்து பிரச்சினைகளைக் கையாண்டிருக்கின்றன.
இந்த சமூகத்திற்காக பேச வேண்டிய அரசியல் தலைமைத்துவம் ஒட்டு மொத்தமான கையாலாகாத் தனத்தை நிரூபித்திருக்கின்றது. நமது பிரச்சினைகளுக்கான தீர்வுகளைப் பெற்றுத் தருவது ஒருபுறமிருக்க பாராளுமன்றத்தில் நாம் ஆறுதல் படும் படியாக நமக்காக ஒரு வார்த்தையைக்கூட எவராவது ஒருவர் பேச மாட்டாரா என கடந்த நான்கு மாத காலமாக நாம் ஏங்கி காத்திருந்தோம்.
மாகாண சபை அதிகாரம் நமது பிரச்சினைகளுக்காக பயன்படுத்தப்படமாட்டாதா..? எனப் பலமுறை ஏங்கியிருக்கிறோம். இவை எதுவுமே நடக்கவில்லை. ஆனால் நமக்காகப் பேசுவதற்காக முன்வந்த மாற்றுமத சகோதரர்களின் குரல்களை நசுக்குவதற்கு மாத்திரமே நமது பாராளுமன்ற உறுப்பினர்கள் வாய் திறந்திருக்கிறார்கள். இந்த அவலம் ஏன் ஏற்பட்டது..? என்பதனை நாம் சிந்தித்து பார்க்க வேண்டும்.
இந்த இடத்தில் நான் இன்னுமொரு விடயத்தை சொல்லியாக வேண்டும்.சகோதர இனத்தைச் சேர்ந்த பாராளு மன்ற உறுப்பினர் சட்டத்தரணி சுமந்திரன் அவர்கள் கொழும்பில் நடைபெற்ற ஒரு மகாநாட்டின் போது உரையாற்றுகின்ற வேளையில் பின்வருமாறு தெரிவித்தார்.
முஸ்லிம்கள் எண்ணிக்கையில் சிறுபான்மையினராக இருக்கின்றார்கள் என்ற ஒரே காரணத்திற்காக அவர்களது கலாசார உடையெனும் உரிமையை அனுபவிப்பதற்கு தடை ஏற்படுமாக இருந்தால் பெரும் பாண்மை மக்களாகிய நாம் அத்தனை பேரும் அந்த கலாசார உடைகளை அணிந்து அந்த மக்களுக்கு பாதுகாப்பும், அரவணைப்பும் வழங்குவோம் எனத் தெரிவித்திருந்தார்.
இது எவ்வளவு தூரம் உணர்வு பூர்வமான யதார்த்தமான இந்த சமூகத்தை அரவணைக்கின்ற கருத்தாக இருக்கிறது என்பதனை நாம் சிந்தித்து பார்க்க வேண்டும்.
இந்த பாராளுமன்ற உறுப்பினரின் ஆறுதல் தரும் வார்த்தைகளைக் கேட்கின்ற போது ஒரு பக்கத்தில் சந்தோசமாகவும் இன்னுமொரு பக்கத்தில் எனக்கு வெட்கமாகவும் இருந்தது. நமக்காக பேச வேண்டிய கடமையைக் கொண்ட நமது சமூகத்தின் பாராளுமன்ற உறுப்பினர்கள் வாய்மூடிக் கிடக்கின்ற போது சகோதர சமூகத்தைச் சேர்ந்த ஒருவர் நமக்காக குரல் கொடுத்திருக்கின்றார் என்பது எனக்கு சந்தோசத்தைத் தந்தது. விடுதலைப் புலிகளின் காலத்தில் சுதந்திரமாகப் பேசமுடியாது இருந்த குரல்கள் இப்போது பரஸ்பர சகோதர உணர்வோடு பேசுகின்ற சூழல் ஏற்பட்டிருக்கின்றது என்பது சந்தோசமாக இருந்தது.
ஆனால், அடுத்த பக்கத்தில் இவ்வாறான நிலைமை அடுத்த சமூகத்திற்கு ஏற்பட்டிருக்குமேயானால் நமது சமூகம் எவ்வாறு நடந்து கொண்டிருக்கும் அல்லது கடந்த காலங்களில் எவ்வாறு நடந்திருக்கிறது என்பதனை எண்ணிப் பார்க்கின்றபோது வெட்கமாக இருக்கின்றது. ஏனைய சமூகத்திற்கு அநீதி இழைக்கப்படுகின்ற போது அதனைப்பற்றி கவலைப் படுகின்வர்களாக அக்கறை காட்டுகின்றவர்களாக அவர்களது பிரச்சினைகளுக்காக குரல் கொடுக்கின்றவர்களாக நமது அரசியல் தலைவர்களோ அல்லது நமது சமூகமோ இருந்தது கிடையாது என்பதுதான் நம்மை வெட்கிக்க வைக்கின்றது.
இந்த இடத்தில் முஸ்லிம் சமூகம் தன்னை ஒழுங்கு படுத்திக் கொள்ள வேண்டிய சில விடயங்களை சுட்டிக் காட்டுவது இங்கு பொருத்தம் என நினைக்கின்றேன்.
முதலில் நமக்காகப் பேசுகின்ற ஊடகங்களை நிறுவுவதில் அக்கறை காட்டுவதுடன் அதனை முதன்மைப்படுத்த வேண்டும். ஏற்கனவே நம் மத்தியில் காணப்படுகின்ற ஊடகங்களைப் பலப்படுத்தியெடுத்து அவை நமது சமூகத்தில் மாத்திரம் அல்லது ஏனைய சமூகங்களையும் ஊடறுத்துச் செல்லுகின்ற ஊடகமாக மாற்றுகின்ற முயற்சிகளை இனிமேலும் தாமதிக்காமல் செய்ய வேண்டும்.
அடுத்ததாக முஸ்லிம் சமூகத் தலைமைத்துவங்கள் அனைத்தும் இணைந்த பலமான கூட்டுத் தலைமைத்துவ கட்டமைப்பொன்றை ஏற்படுத்த வேண்டும். ஏற்கனவே ஜம்இயத்துல் உலமாவும் முஸ்லிம் கவுன்சிலும் இந்த திசையில் அதிகமான பங்களிப்புகளைச் செய்திருக்கின்றது. அவை இன்னும் பலப்படுத்தப்படவேண்டும்.
இந்த நாட்டில் இருக்கின்ற சமூக அமைப்புக்கள் புத்தி ஜீவிகள் துறைசார் நிபுணர்கள் என அத்தனை பேர்களையும் இணைத்ததாக சமூகம் சார்பான பொதுத் தீர்மானங்களை மேற்கொள்ளக் கூடிய அதிகாரமும் அங்கீகாரமும் பெற்ற சமூக தலைமைத்துவ கட்டமைப் பொன்று உருவாக்கப்பட வேண்டும் என்ற கருத்து இன்று பரவலாகப் பேசப்படத் தொடங்கியிருக்கிறது. இது காலம் தாமதிக்கப்படாமல் உடனடியாக ஏற்படுத்தப்படவேண்டும். இவ்வாறான சமூக கூட்டுத் தலைமைத்துவக் கட்டமைப்புக்களில் உங்களைப் போன்ற வெளிநாட்டில் வாழுகின்ற சமூகத்தின் பிரதிநிதிகளும் உள்வாங்கப்படவேண்டும்.
நாம் ஒழுங்கு படுத்த வேண்டிய, புணர் நிர்மானம் செய்யவேண்டிய. மிகமுக்கியமான துறையாக நமது அரசியல் துறை இருக்கிறது.
'அரசியல் என்றால் இப்படித்தான். அவர்களை திருத்தவே முடியாது நமக்கேன் இந்த வீண் வம்பு' என்று ஒதுங்கிக் கொள்கின்ற மனோ நிலையை நாம் உடனடியாக மாற்றிக் கொள்ள வேண்டும். அரசியல் பலம் என்பது தரமானவர்களின் கைகளில், சமூகத்திற்கு விசுவாசமானவர்களின் கைகளில் இல்லாத போது எப்படி நாம் பிரச்சினைகளைக் கைளாள முடியாமல் திண்டாடுகின்றோம் என்பதனைக் கடந்த ஐந்து மாதகாலமாக நாம் புரிந்திருக்கின்றோம். இதற்கான தீர்வு என்ன..? என்பதனை நாம் யோசிக்க வேண்டும்.
கடந்த மாகாண சபைத் தேர்தல் நடை பெற்ற வேளையில் மாகாண சபையின் ஆட்சியை அமைக்கின்ற ஒட்டு மொத்தமான அதிகாரம் முஸ்லிம்களுடைய கைகளுக்கு வந்தது. ஆனால் அந்த ஆட்சியினை அமைக்கின்ற போது முஸ்லிம்களுக்குள்ள ஏதாவது பிரச்சினைகளை அவர்கள் தீர்த்து வைத்தார்களா என்பதை நாம் சிந்தித்துப் பார்க்க வேண்டும்.
உதாரணமாக கிழக்கிலே இருக்கின்ற முதன்மையான பிரச்சினையான காணிப் பிரச்சினை இருக்கிறது. இந்த விடயத்தில் ஒரு ஏக்கர் காணியுடைய பிரச்சினையாவது கிழக்கு மாகாண சபையின் அதிகாரத்தைப் பயன்படுத்தி இவர்களால் தீர்த்து வைக்க முடிந்திருக்கிறதா..? என்று நாம் யோசித்தால் இல்லை என்ற பதிலே கிடைக்கிறது.
ஆக மொத்தத்தில் கிழக்கு மாகாண சபையில் கிடைத்த அரசியல் அதிகாரம் சமூகத்துக்கான ஒருதுளி நண்மையைக் கூட பெற்றுக் கொள்ளப் பயன்படாத செல்லாக் காசாக மாறியிருக்கிறது. அதுபோலதான் பாராளுமன்ற அரசியல் அதிகாரமும் செல்லாக் காசாக இருப்பதனை கடந்த ஐந்து மாத கால பிரச்சினைகளின் போது நாம் கண்டு கொண்டோம். இதற்கு காரணம் என்ன..?
இதற்கான அடிப்படைக் காரணம் சமூகப் பொறுப்பாக, சமூகக் கடமையாக மேற் கொள்ளப்பட வேண்டிய அரசியல் இன்று தனி நபர்களினதும், கட்சிகளினதும் வியாபாரமாகவும், வயிற்றுப் பிழைப்பாகவும் மாறியிருக்கிறது. சமூகத்தின் பெயரில் அமானிதமாக கிடைக்கும் அதிகாரத்தினை துஸ்பிரயோகம் செய்து பொருளீட்டுவதிலும் தமது சுக போகங்களை அதிகரித்துக் கொள்வதிலுமே இவர்கள் குறியாக இருக்கின்றனர். தனது வாழ்வாதாரமாக அரசியலையே நம்பியிருக்கும் ஒருவர் அதற்கு பாதிப்பு வரும் வகையில் சமூகத்திற்காக எப்படி சுதந்திரமாக குரல் கொடுக்க முடியும்? தமது அதிகார துஸ்பிரயோகங்களிலும், தில்லு முல்லுகளிலிருந்தும் தம்மை பாதுகாத்துக் கொள்ள வேண்டும் என்பது அவர்களின் தலையாய முன்னுரிமையாக மாறுகின்ற போது சமூகத்திற்காக இது போன்ற வர்களால் எப்படி சுதந்திரமாக வாய்திறந்து பேச முடியும்...?
தலைமைத்துவப் போட்டியும் தனிநபர் அதிகார வெறியும்தான் நமது சமூகத்தின் அரசியல் பலத்தை செல்லாக் காசாக்கிய மற்றுமொரு காரணியாகும். இதனால்தான் சமூகத்திற்காகவோ அல்லது தாய் நாட்டின் நலன்களுக்காகவோ எந்தப் பங்களிப்பும் செய்ய முடியாத உதிரிகளாக நமது அரசியல் பிரதிநிகள் மாறியிருக்கிறார்கள்
இந்ந நிலைமையை நாம்தான் மாற்றியமைக்க வேண்டும். தனிமனித மேலாதிக்கம் இல்லாத கூட்டுத் தலைமைத்துவ ஒழுங்கு,அமானிதம் எனும் சமூகப் பொறுப்பு, நேர்மை, தர்மம், நீதி, இறையச்சம் போன்ற இஸ்லாமிய விழுமியங்களை அடிப்படையாகக் கொண்ட மாற்று அரசியல் ஒழுங்கொன்றினை நாம் உருவாக்கியே ஆக வேண்டும்.
இந்த ஒழுங்கு படுத்தலை நாம் சிந்திக்காவிட்டால் தொடர்ந்து வரும் அவலங்களை எவராலும் மாற்றமுடியாது. அது போலவே சமூகத்துக்குப் பிரயோசமான பொறியியலாளர்களை வைத்தியர்களை சட்டத்தரணிகளை உருவாக்குவதில் நாம் கவனம் செலுத்துவது போலவே அரசியலை தொழிலாகவன்றி சமூகக் கடமையாகச் செய்கின்ற பக்குவமும் நேர்மையும் இறையச்சமும் கொண்ட தரமான அரசியல் வாதிகளை உருவாக்குகின்ற விடயத்தில் நாம் கவனம் செலுத்த வேண்டும். இல்லாது போனால் இந்த அவலங்கள் தொடர்வதை யாராலும் நிறுத்த இயலாமல் போய் விடும்.
இந்த சமூகத்தை ஒழுங்கு படுத்துகின்ற நடவடிக்கைகளுக்கு புலம் பெயர்ந்து வாழுகின்ற உங்களைப்போன்ற சகோதரர்களின் பங்களிப்பு மிகவும் மகத்தானது. குறிப்பாக கட்டார் நாட்டில் வாழுகின்ற இலங்கை முஸ்லிம்கள் மிகவும் முக்கியமான பங்களிப்புகளை வழங்குவதற்கு முன்வர வேண்டும்.
No comments